ஐ படத்தின் வசூலை முறியடிக்குமா பாகுபலி?
சென்னை: ஷங்கரின் ஐ பட வசூலை பாகுபலி முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகை வியாபித்துள்ளது.
தென்னிந்தியத் திரைப்படங்களில் இதுவரை அதிகம் வசூல் செய்த படமாக, ஷங்கரின் ஐ திகழ்கிறது. தென்னிந்தியத் திரைப்படங்களாலும் வசூல் சாதனையை நிகழ்த்த முடியும் என்று முதல்முறையாக உலகிற்கு எடுத்துச் சொன்ன படம் ஷங்கரின் ஐ.

2015 ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த ஐ திரைப்படம் உலகெங்கும் வசூல் செய்த மொத்த தொகை சுமார் 202 கோடி ரூபாய் ஆகும். இந்த வசூலை இதுவரை எந்தத் தென்னிந்தியத் திரைப்படங்களும் செய்ததில்லை.
ஐ திரைப்படம் வெளிவந்து 6 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது இந்த மாதம் வெளியாக இருக்கும் பாகுபலி திரைப்படம், ஐ படத்தின் வசூல் ரெக்கார்டை முறியடிக்கும் என்று திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒருபேச்சு எழுந்துள்ளது.
ஷங்கர் ஐ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நன்கு விளம்பரம் செய்தார் ஆனால் பாலிவுட்டில் விளம்பரம் செய்யத் தவறிவிட்டார், இதன் விளைவாக வெறும் 16 கோடியை மட்டுமே இந்தியில் ஐ வசூலித்தது.
ஷங்கரை விட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி எல்லா வகையிலும் பாகுபலி படத்தை நன்றாகவே விளம்பரம் செய்கிறார், தென்னிந்திய மொழிகள் தவிர்த்து இந்தியிலும் பெரிய அளவில் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.
இந்தியில் படத்தை வாங்கி இருக்கும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் சுமார் 1500 திரைகளில் படத்தை நன்கு விளம்பரம் செய்து வெளியிடுகிறார். உலகெங்கும் சுமார் 4000 திரையரங்குகளில் பாகுபலி வெளியாகிறது.
இன்னும் 2 தினங்களில் வெளியாக இருக்கும் பாகுபலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது, ரசிகர்கள் பலரும் விடுமுறை எடுத்துக் கொண்டு படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
நடப்பதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது கண்டிப்பாக ஐ படத்தின் வசூலை பாகுபலி முறியடிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











