ரஜினி பவுலிங், கமல் பேட்டிங்... களைகட்டும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி
சென்னை: ஏப்ரல் 17 ம் தேதி நடைபெறும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் நேரடியாக மோதவிருக்கின்றன.
நடிகர் சங்கத்தின் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 17 ம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்காக இந்தக் கிரிக்கெட் போட்டியை நாசர் தலைமையிலான, தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்துகிறது.

நடிகர் சங்கம்
கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வென்று நிர்வாகத்தைக் கைப்பற்றியது. தற்போது புதிய நிர்வாகிகள் நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டும் நோக்கத்தில் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடத்துகின்றனர். வருகின்ற ஏப்ரல் 17 ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

அனைத்து நடிகர்களும்
இந்தப் போட்டியில் அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிறமொழி நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பினை ஏற்று அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

8 அணிகள்
சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ், ஜீவா, விஷ்ணு உள்ளிட்டவர்களின் தலைமையில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணிக்கும் 6 நடிகர்கள் என்று மொத்தம் 48 நடிகர்கள் கலந்து கொள்கின்றனர்.மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறும்.

10 மணி தொடங்கி
முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதியில் மோதி ஜெயிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடும். காலை 10 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

ரஜினி, கமல்
இதில் முதல் பந்தை வீசி ரஜினி போட்டியைத் தொடங்கி வைப்பார் என்றும், கமல் ஒரு அணி சார்பில் ஆடப்போவதாகவும் கூறுகின்றனர். ரஜினி பவுலிங்கும், கமல் பேட்டிங்கும் செய்வதால் மைதானத்தில் கூட்டத்துக்கு குறைவிருக்காது.

நயன்தாரா, சமந்தா
ஒவ்வொரு அணிக்கும் ஒரு நடிகை விளம்பரத் தூதுவராக நியமிக்கப்படவிருக்கிறார். நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய நடிகைகளை விளம்பரத் தூதுவர்களாக நியமிக்கவுள்ளனர்.

சென்னை, திருச்சி
சென்னை, திருச்சி , மதுரை என 8 அணிகளுக்கும் ஊர்ப் பெயர்களை சூட்டவுள்ளனர். போட்டி நடைபெறும் நாளன்று ரசிகர்கள் அதிகளவில் திரளுவார்கள் என்பதால் மைதானத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜய், அஜீத்?
ரஜினி, கமல் என்று மூத்த நடிகர்கள் கலந்து கொண்டாலும் கூட விஜய், அஜீத் கலந்து கொள்வது சந்தேகம் தான் என்கின்றனர். ஆனால் மற்ற மாநில நடிகர்கள் கலந்து கொள்வதால் இந்த இருவரையும் கலந்து கொள்ள வைப்பதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றனவாம்.
தல, தளபதி கலந்து கொள்வார்களா? பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











