“கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?”... ரகசியத்தை உடைத்த ராஜமௌலி!
மும்பை: பலரின் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் "கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?" என்ற கேள்விக்கு, கடைசியில் பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியே பதில் அளித்துள்ளார்.
பிரம்மாண்டமான காட்சிகளால் வசூலில் சாதனை புரிந்து, தேசிய விருதுகளை வாங்கிய படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
பாகுபலி பட முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் கட்டப்பா, பாகுபலியைக் கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் என்பதற்கு விடை, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தெரிய வரும்.

ஏன்... ஏன்... ஏன்?
ஆனால், அதுவரை காத்திருக்க பொறுமையில்லாத ரசிகர்கள் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விக்கு பதிலைத் தேடி அலைந்து வருகின்றனர்.

சிபிராஜின் லொள்ளு...
இது தொடர்பாக கட்டப்பாவாக நடித்த சத்யராஜின் மகன் சிபிராஜிடம் கூட ஒருமுறை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘என்னை பாகுபலியாக ராஜமௌலி நடிக்க வைக்காததால் தான், எங்கப்பா கட்டப்பா பாகுபலியைக் கொன்று விட்டார்' என நகைச்சுவையாகக் கூறி இருந்தார்.

வைரல்...
கடந்தாண்டு அதிகம் கேட்கப்பட்ட கேள்வியாக வைரலாக உலா வந்தது இந்தக் கேள்வி. ஆளாளுக்கு ஒவ்வொரு காரணங்களை இதற்கு பதிலாக அளித்து வருகின்றனர்.
ராஜமௌலியின் பதில்...
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி, இதற்கான பதிலை அளித்துள்ளார். அதில் அவர், ‘நான் தான் பாகுபலியைக் கொல்லச் சொல்லி கட்டப்பாவிடம் சொன்னேன். அதனால் தான் அவர் கொன்றார்' எனத் தெரிவித்துள்ளார்.
என்னங்க ஓவரா எதிர்பார்த்து ஏமாந்துட்டீங்களா... வாட் பிளட்... சேம் பிளட்!


Click it and Unblock the Notifications











