எத்தனை ஆயிரம் பாடல்கள்? குரல் மருத்துவர்.. லவ் யூ எஸ்.பி.பி., சிம்பு உருக்கமான கடிதம்!
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு நடிகர் சிம்பு உருக்கமான ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவை அறிந்த திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை செங்குன்றம் அருகே உள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

சிம்பு உருக்கம்
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட சிலம்பரசன் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து உருக்கமான ஒரு கடிதத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

குரல் மருத்துவர்
எத்தனை ஆயிரம் பாடல்கள்?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்?? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன். சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ் பி பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க... காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள... உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்.

என்னை மதித்து பாடினார்
என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார். குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள். என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது.

இவன் தான் நாயகன்
அதைப்போல... "காதல் அழிவதில்லை" படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் "இவன்தான் நாயகன்" என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார். முதன் முதலில் "இவன் தான் நாயகன்" என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சார்.

பாடு நிலாவே.. லவ்யூ
யாரையும் காயப்படுத்தாத அந்த குணம். தவறிப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்பு கோரும் தன்மை, ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கடந்தவர்... விடைகொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடு நிலாவே... லவ் யூ என நடிகர் சிம்பு உருகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











