மகளிர் தின ஸ்பெஷல்...தமிழ் சினிமாவில் தடம் பதித்து கலக்கும் பெண் இயக்குனர்கள்
சென்னை : உலகம் முழுவதும் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து, தங்களின் பலத்தையும், ஆற்றலையும் நிரூபித்து கலக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் பெண்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற துறைகளை போல் சினிமா துறையிலும் தடம் பதித்து சாதிக்க துவங்கி விட்டனர். சினிமாவில் நடனம், தயாரிப்பு, டைரக்ஷன், கேமிரா என அனைத்திலும் பெண்கள் சாதித்து, தங்கள் திறமைகளால் அனைவரையும் அசர வைத்து வருகின்றனர். இப்படி தமிழ் சினிமாவில் தடம் பதித்து கலக்கி வரும் பெண் டைரக்டர்கள் சிலரை பற்றி இங்கே பார்க்கலாம்.

சுதா கொங்கரா
மணி ரத்னத்தின் சினிமா பள்ளியில் பயின்ற சுதா கொங்கரா, 2010 ல் துரோகி படத்தின் மூலம் டைரக்டராக அறமுகமானார். விஷ்ணு விஷால் நடித்த இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு 6 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, பெண்கள் பாக்சிங்கை மையமாகக் கொண்டு இறுதிச்சுற்று படத்தில் தனது பலத்தை காட்டி அனைவரையும் மிரள வைத்தார். உண்மையான பாக்சரையே ஹீரோயின் ஆக்கி, தனது முதல் பிரம்மாண்ட வெற்றியை பதித்தார். தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தையும் இயக்கி பல சர்வதேச விருதுகளை பெற்றார். தற்போது அடுத்ததாக இவர் யாரை இயக்க போகிறார் என்பதை இந்திய சினிமாவே ஆவலாக எதிர்பார்த்துள்ளது.

கிருத்திகா உதயநிதி
கிருத்திகா, 2003 ல் ரொமான்டிக் காமெடி படமான வணக்கம் சென்னை படத்தை இயக்கி டைரக்டரானார். இந்த படத்தை அவரது கணவர் உதயநிதி ஸ்டாலினே ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பேனரில் தயாரித்தார். முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் காளி மற்றும் மியூசிக் வீடியோ ஆகியவற்றை தொடர்ந்து இயக்கி வருகிறார்.

ஹலீதா ஷமீம்
தமிழ் சினிமாவின் மற்றொரு திறமையான பெண் இயக்குனர் ஹலீதா. 2014 ல் பூவரசம் பீபீ என்ற படத்தை இயக்கினார். முதல் படம் தோல்வி அடைந்ததால் 2019 ல் சில்லு கருப்பட்டி என்ற படத்தை இயக்கி அனைவரிடமும் பாராட்டை பெற்றார். நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி படங்களை இயக்கி அனைவரின் மனதையும் வென்று விட்டார். புஷ்கர்-காயத்ரி, மிஷ்கின் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி ஹலீதா, தனது மூன்றாவது படமாக ஏலே படத்தை இயக்கி, ஒடிடி மற்றும் டிவியில் நேரடியாக ரிலீஸ் செய்தார்.

காயத்ரி மணிகண்டன்
தனது கணவர் புஷ்கருடன் இணைந்து பல படங்களை இயக்கி வெற்றி பெற்று வருகிறார் காயத்ரி மணிகண்டன். இருவரும் இணைந்து 2007 ல் ஓரம் போ படத்தை இயக்கினர். இதைத் தொடர்ந்து 2010 ல் வா குவாட்டர் கட்டிங் படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. மூன்றாவது படமாக விஜய் சேதுபதி - மாதவன் நடித்த விக்ரம் வேதா படத்தை இயக்கினர். இது மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது கணவர் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானார். பிறகு வை ராஜா வை படத்தை இயக்கினார். தற்போது முஸாஃபர் என்ற மியூசிக் வீடியோவை இயக்கி உள்ளார். இந்த வீடியோ 3 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தனது அப்பா ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா.


Click it and Unblock the Notifications











