சிம்புவோட படமா.. எல்லாம் வதந்திதாங்க.. முதல்ல சூர்யாதான்.. சுதா கொங்கரா பளீச்!
சென்னை : தற்போது பாலிவுட்டில் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. அக்ஷய் குமார் இந்தப் படத்தின் ஹீரோவாகியுள்ளார்.
இதே படத்தை முன்னதாக சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்கியிருந்தார். ஓடிடியில் வெளியான இந்தப் படம் சமீபத்தில் 5 தேசிய விருதுகளை அள்ளியது.
இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளதை சுதா கொங்கரா உறுதிப் படுத்தியுள்ளார்.

சூரரைப் போற்று படம்
நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது.

பிரச்சினைகளை சந்தித்த சூரரைப் போற்று
முதலில் திரையரங்குகளில்தான் ரிலீசாக இருந்தது சூரரைப் போற்று. ஆனால் சிலபல பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் ஓடிடியில் கடந்த 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியானது. தன்னுடைய பண்பட்ட நடிப்பால் இந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருந்தார் சூர்யா. படத்தின் திரைக்கதையும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று.

5 தேசிய விருதுகள்
ஓடிடியில் வெளியான போதிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். படத்தின் சிறப்பான காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இந்நிலையில் இந்தப் படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தின் வெளியீட்டின்போது எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு இந்த விருதுகள் கண்டிப்பாக சூர்யாவிற்கு மருந்தாக இருக்கும்.

இந்தியில் ரீமேக்
இந்தப் படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்ஷய் குமார் நடித்துவரும் இந்தப் படத்தை சுதா கொங்கராவே இயக்கி வருகிறார். தமிழில் இசையமைத்த ஜிவி பிரகாஷ் இந்தியிலும் இசையமைத்து வருகிறார்.

சூர்யாவை இயக்கும் சுதா கொங்கரா
இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா மற்றும் சூர்யா அடுத்த படத்திலும் இணையவுள்ளனர். இதுகுறித்து சுதா கொங்கரா உறுதி தெரிவித்துள்ளார். மேலும் இதையடுத்து கேஜிஎப் படங்களை தயாரித்த ஹோம்பாலே நிறுவனத்துடன் கைக்கோர்க்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிம்புவை இயக்கவில்லை
அடுத்ததாக சுதா கொங்கரா நடிகர் சிம்புவை இயக்கவுள்ளதாகவும் அந்தப் படத்தை ஹோம்பாலே தயாரிக்க உள்தாக சில வாரங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதை சுதா கொங்கரா மறுத்துள்ளார். இது வதந்தி என்றும் ஆனால் சூர்யா படத்தை தொடர்ந்து தான் ஹோம்பாலே நிறுவனத்துடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சூர்யாவுடன்தான் அடுத்தப்படம்
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தான் ஹோம்பாலே நிறுவனத்துடன் நட்பில் உள்ளதாகவும் சூர்யா படத்திற்கு பிறகு கண்டிப்பாக அவர்களுடன்தான் தான் படம் இயக்குவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சூர்யாவுடன் சுதா கொங்கரா அடுத்ததாக இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











