என் அப்பா சாகும் போது அப்படித்தான் கூப்பிட்டாரு.. சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா நெகிழ்ச்சி!
சென்னை: 5 தேசிய விருதுகளை சூரரைப் போற்று படத்தின் மூலம் அள்ளியிருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா மிகப்பெரிய நன்றி கடிதத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், தனது அப்பா பற்றியும் குருநாதர் மணிரத்னம் பற்றியும் மிகவும் நெகிழ்ச்சியுடன் சுதா கொங்கரா பேசியுள்ளார்.
மேலும், நடிகர் சூர்யா மற்றும் ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

சாதனை இயக்குநர்
பெண் இயக்குநர் என தன்னை வகைப்படுத்துவது கூட பிடிக்காது என சொல்லி வரும் இயக்குநர் சுதா கொங்கரா தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்கள் வரிசையில் சாதனை இயக்குநராக கால் மேல் கால் போட்டு சும்மா கெத்தாக அமர்ந்துள்ளார். முதல் படமான இறுதிச்சுற்று படத்திலேயே தான் யார் என்பதை நிரூபித்த சுதா கொங்கரா, சூரரைப் போற்று படத்தில் அடுத்த இலக்கை அடைந்துள்ளார்.

5 தேசிய விருதுகள்
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை, சிறந்த திரைக்கதை என ஒட்டுமொத்தமாக 5 தேசிய விருதுகள் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், தற்போது நெகிழ்ச்சியாக ஒரு நன்றி கடிதத்தை பதிவிட்டு இருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

அப்பா தான் காரணம்
என் அப்பாவின் மரணத்தில் இருந்து தான் நான் இயக்குநராக மாறினேன். அவர் என்னை அழைத்து பேசிய அந்த கடைசி நொடியைத் தான் சூரரைப் போற்று படத்தில் அப்படியே வைத்திருந்தேன். எனக்கு இன்று கிடைத்து வரும் பாராட்டுக்களை பார்க்க அவர் என்னுடன் இல்லை என்பது மட்டும் தான் எனக்கு மிகப்பெரிய வருத்தமாக உள்ளது என மறைந்த தனது தந்தைக்கு முதல் நன்றியை தெரிவித்து உருக்கமாக இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார் சுதா கொங்கரா.

மணிரத்னம் இல்லைன்னா ஜீரோ
அப்பாவை தொடர்ந்து இயக்குநரும் தனது குருவுமான மணிரத்னத்துக்கு நன்றி கூறியுள்ளார் சுதா கொங்கரா. அவர் மட்டும் இல்லை என்றால், நான் இப்போதும் ஜீரோவாகத்தான் இருந்திருப்பேன். எனக்கு கிடைத்துள்ள சினிமா அறிவு அனைத்துக்கும் காரணமே அவர் தான் என குருவிற்கும் மிகப்பெரிய நன்றியை கூறி உள்ளார்.

சூர்யாவுக்கு நன்றி
கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க அனுமதி கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. அதே போல, கோபிநாத்தாகவே வாழ்ந்து அசத்தி இப்படியொரு படம் இத்தனை உயரங்களை அடைய அனைத்து காரியங்களையும் செய்து விட்டு சாதாரணமாக இருக்கும் நடிகர் சூர்யாவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் எனக் கூறியுள்ளார். மேலும், பத்திரிகை நண்பர்கள், ரசிகர்கள், உதவி இயக்குநர்கள், சூரரைப் போற்று படத்தில் நடித்த நடிகர்கள், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











