144 தயாரிப்பாளர்களின் காப்பீடு கணக்குகள் அழிப்பு... தயாரிப்பாளர் சங்கம் மீது சுரேஷ் காமாட்சி வழக்கு!
சென்னை: கலைப்புலி தாணு உள்ளிட்ட 144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீட்டு கணக்குகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் அழித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் பணம் செலுத்தி காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளனர்.
ஆனால் விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் வந்த பிறகு, குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காப்பீட்டை ரத்து செய்து, அவர்கள் கணக்குகளையே அழித்துள்ளனர்.
இப்படி காப்பீட்டை இழந்த தயாரிப்பாளர்கள் பலரும் கலைப்புலி தாணு, ஆர்பி சவுத்ரி, சுரேஷ் காமாட்சி பிரபலமானவர்கள், முன்னணி தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுரேஷ் காமாட்சி கூறுகையில், "தயாரிப்பாளர்கள் சிலரின் காப்பீட்டுக் கணக்குகளை விஷால் நிர்வாகம் அழித்துவிட்டதாகத் தகவல் கிடைத்ததும், அதுகுறித்து எழுத்துப் பூர்வமாக தெரிந்து கொள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு இமெயில் அனுப்பினேன். அதற்கு எனது கணக்கு அழிக்கப்பட்டு விட்டதாக பதில் வந்தது.
எதற்காக இந்த காப்பீட்டுக் கணக்கு அழிக்கப்பட்டது? எங்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் காப்பீட்டு பாலிசி கொடுத்தார்கள். இப்போது எங்களைக் கேட்காமலேயே அழித்துள்ளனர். இதை எதற்காகச் செய்திருக்கிறார்கள்? கணக்கு அழிக்கப்பட்ட தயாரிப்பாளர்களில் பலர் மூத்தவர்கள். அவர்களுக்கு உடல் நீதியான பிரச்சினை வரும்போது, பணம் செலுத்தி பெற்ற காப்பீட்டு கணக்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இது திட்டமிட்ட மோசடி. எனவேதான் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











