மலை ‘அண்ணாமலை‘ 30 ஆண்டு வெற்றி கொண்டாட்டம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள் !
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படங்களில் ஒன்று அண்ணாமலை. பாக்ஸ் ஆபிசில் கல்லாக்கட்டியத் இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
Recommended Video
ரஜினிகாந்தின் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களை கட்டி இழுத்த திரைப்படமும் இதுவாகும். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, ரேகா, வைஷ்ணவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அண்ணாமலை படம் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியின் ரசிகர்கள் #30YearsofAnnamalai என்ற ஹாஸ்டேக் வைரலாகி வருகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை திரைப்படம் வெளியாகி 30 வருஷம் ஆச்சா... என்னால நம்பவே முடியவில்லை என்று பலரும் இன்று வாயை பிளந்தனர். படம் வெளியாகி என்னமோ 30 வருஷமாகி இருக்கலாம். ஆனால், அந்த படத்தில் வரும் "வந்தேன்டா பால்காரன்.. பசு மாட்டபத்தி பாடபோறேன்" என்ற பாடல் இன்னும் புத்தம் புதுசாகவே உள்ளது. பல திருவிழாக்களிலும், வீட்டு விசேஷத்திலும் தற்போது வரை இந்த பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

"காலண்டரில குறித்து வைத்துக் கொள்"
சரி பாட்டைவிடுங்கப்பா, அந்த படத்தில் சரத்பாபு முன்பு தொடையைத்தட்டி "அசோக் உன் காலண்டரில குறித்து வைத்துக் கொள்" என்று ரஜினி பேசிய வசனத்தை, சவால் என்று வந்து விட்டால், இன்றைய இளசுகளும் "காலண்டரில குறித்து வைத்துக் கொள்" என ரஜினி ஸ்டைலில் சவால் விட்டு வருகின்றனர். இளைஞர்கள் மத்தியில் தற்பொழுதும் அண்ணாமலையின் தாக்கம் இருந்து வருகிறது.

இறுதியில் சுபம்
ஏழை பால்காரனான ரஜினி, பணக்காரனான சரத்பாபுவும் சிறு வயது முதலே நண்பர்கள். ரஜினிகாந்தின் சொந்த வீட்டை ஏமாற்றி அந்த இடத்தில் ஹோட்டல் ஒன்றைக் கட்டுகிறார் சரத்பாபு. மேலும், ரஜினியும், சரத்தும் பிரிவதற்கான வேலைகளை கனகச்சிதமாக செய்கிறார் ராதாரவி. நண்பனால் ஏமாற்றப்பட்ட ரஜினி, கடினமாக உழைத்து சபதத்தை நிறைவேற்றி தொழிலதிபராகிறார். இறுதியில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து விடுகிறார்கள் இது தான் அண்ணாமலை படத்தின் கதை.

கொண்டையில் தாழம்பூ
அண்ணாமலை திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு மற்றொரு காரணம் தேனிசை தென்றல் தேவாவின் இசை எனலாம். வந்தேன்டா பால்காரன், அண்ணாமலை... அண்ணாமலை பாடலும், கொண்டையில் தாழம்பூ, றெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் போன்ற பாடல்கள் ஆல்டைம் பேவரைட் பாடல்களாகும். இந்த படத்திற்கு பிறகு தான் தேவா தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

கூஸ்பம்ஸ் நிச்சயம்
மனோரம்மாவின் அம்மா சென்டிமென்ட், சரத்பாபுவின் நட்பு, காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக இப்படம் இருந்தது. முதல் பாதியில் வெகுளியாக சுற்றி வந்த ரஜினிகாந்த், இரண்டாம் பாதியில் மொத்தமும் மாறி சூட் கோட் என பட்டையை கிளப்பி இருப்பார். இந்த படத்தை எத்தனை முறைப்பார்த்தாலும் அந்த கூஸ்பம்ஸ் நிச்சயம் இருக்கும்.

வெற்றி கூட்டணி
இப்படத்திற்காக முதலில் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் இயக்குநர் வசந்த். ஆனால், திடீரென அவர் மாற்றப்பட்டு சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியது இதுவே முதல் முறை. இந்தப் படத்திற்குப் பிறகும் இந்த கூட்டணி இணைந்து வீரா, பாட்ஷா போன்ற மாஸ் வெற்றிப்படங்களை கொடுத்தனர்.

30 Years of Annamalai
அண்ணாமலை திரைப்படம் வெளியாகி இன்றோடு 30ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் தீவிர ரசிகர்கள் #30YearsofAnnamalai ஹாஸ்டேக் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











