திருவள்ளூர் மாவட்டத்தில் 3 கிராமங்களை தத்தெடுத்த சூர்யா
திருவள்ளூர்: மழை, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 3 கிராமங்களை நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை சார்பாக தத்தெடுத்து இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் பெய்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நடிக, நடிகையரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் நெல்வை, கச்சூர் மற்றும் கெரகம்பாக்கம் ஆகிய 3 கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறார்.
சூர்யா இது குறித்து கூறும்போது "இருளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இவர்கள் இங்கே வசிக்கிறார்கள் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதால் அரசின் எந்த ஒரு சலுகைகளையும் இவர்கள் பெறத் தகுதியற்ற நிலையில் இருக்கின்றனர்.
இந்த மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாமலும், பள்ளி செல்லாமலும் இருக்கின்றனர்".
என்று இந்தக் கிராம மக்களின் நிலை பற்றி கூறும் சூர்யா, இவர்களின் வாழ்வாதரங்களை சீரமைத்திட இந்தப் பகுதிகளை தத்தெடுத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
இந்தக் கிராமங்கள் மீண்டும் பழைய நிலையை அடைய சுமார் 25 லட்சங்களை அகரம் அறக்கட்டளை சார்பில் ஒதுக்கி இருக்கின்றனர். மேலும் நிதி வசூல் செய்து இந்தக் கிராம மக்களுக்கு உதவிட சூர்யா முடிவெடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











