விரைவில் சூர்யா 41 ஷுட்டிங்...கன்ஃபார்ம் செய்த சூர்யா...இப்படியா கிளப்பி விடுவீங்க?
சென்னை : டைரக்டர் பாலா இயக்கும் சூர்யா 41 படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக சோஷியல் மீடியாவில் தீயாய் தகவல் பரவிய நிலையில், சூர்யா 41 ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதாக சூர்யாவே ட்வீட் போட்டுள்ளார்.
பிதாமகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து சூர்யா - பாலா மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். சூர்யாவின் 41 வது படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்த ஷுட்டிங்
சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் கன்னியாகுமரியின் கடலோர மீனவ கிராமங்களில் மார்ச் மாதம் துவங்கி நடத்தப்பட்டது. இந்த படத்தில் சூர்யா மீனவர் ரோலில் நடிக்கிறார். இது வழக்கமான பாலா படமாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான படமாக எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஜுலை மாதத்திற்குள் சூர்யா 41 படத்தை முடித்து விட்டு, அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டதால் விறுவிறுப்பாக ஷுட்டிங் நடத்தப்பட்டது.

இப்படியா பீதிய கிளப்புவீங்க
இதற்கிடையில் சூர்யா மும்பை புறப்பட்டு சென்றதால், பாலா - சூர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் ஷுட்டிங்கில் இருந்து சூர்யா பாதியிலேயே கோபமாக கிளம்பிச் சென்றதாகவும், படத்தில் இருந்து பாலா நீக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. இதனால் அந்த தகவல் உண்மையில்லை. கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 35 நாட்களாக நடத்தப்பட்டு வந்த சூர்யா 41 படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டதாகவும், அடுத்த கட்ட ஷுட்டிங் கோவாவில் ஜுன் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சூர்யா 41 கைவிடப்பட்டதா
இந்நிலையில் சூர்யா 41 படம் பாதியில் நிறுத்தப்பட்டது கிட்டத்தட்ட உண்மை தான் என கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது. பாலா இயக்கிய படம் கைவிடப்பட்டதால் சூர்யா 41 படத்தை சிறுத்தை சிவாவிடம் இயக்க சொல்லி சூர்யா சொல்லி விட்டதாகவும், சிறுத்தை சிவா - சூர்யா இணையும் படம் இரண்டு பாகங்களாக, கேஜிஎஃப் ஸ்டைலில் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வாடிவாசல் படம் தாமதமாகி வருவதால் அதற்கு முன் சிறுத்தை சிவா படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

அடித்து சொன்ன சூர்யா
இந்த சமயத்தில் சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதாக, டைரக்டர் பாலாவுடன் இருக்கும் தன்னுடைய போட்டோவை பகிர்ந்து ட்வீட் போட்டுள்ளார் சூர்யா. அடிக்கடி சூர்யா - பாலா படம் கைவிடப்பட்டதாக வதந்தி பரவி வரும் நிலையில், சூர்யா 41 படத்தை பாலா தான் இயக்குகிறார் என்பதை கன்ஃபார்ம் செய்துள்ளார் சூர்யா. சூர்யா ட்வீட் போட்ட சிறிது நேரத்திலேயே #Suriya41 ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











