அட்லாண்டாவில் சூர்யா... ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ 10 லட்சம் நன்கொடை!
அட்லாண்டா(யு.எஸ்): ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக நடிகர் சூர்யா பத்து லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
அகரம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளுக்காக சூர்யா அமெரிக்கா வந்துள்ளார். அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சூர்யாவுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதலில் சூர்யாவின் நிகழ்ச்சி நிரலில் அட்லாண்டா இடம் பெறவில்லை. ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை அறிந்த சூர்யா, அதில் தானும் அதில் கலந்து கொள்ள விருப்பத்தை தெரிவித்தார். உடன் தன்னுடைய பயணத் திட்டத்தையும் மாற்றி அமைத்தார்.

சூர்யா வருகையையொட்டி, அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தினரும், 'ஹார்வர்ட் தமிழ் இருக்கை - அகரம் அறக்கட்டளை'க்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்து விட்டனர். நுழைவுக் கட்டணம் மூலம் திரட்டப்பட்ட தொகை ஹார்வர்ட் தமிழ் இருக்கை மற்றும் அகரம் அறக்கட்டளைக்கு பாதிப் பாதியாக வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிறுவனர்-இயக்குநர் டாக்டர் ஜானகிராமன் கலந்து கொண்டு உரையாற்றினார், ஹார்வர்ட் தமிழ் இருக்கை மற்றும் அதன் அவசியம் பற்றியும், இதுவரையிலும் திரட்டப்பட்டுள்ள நிதி மற்றும் கூடுதல் நிதி தேவை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

சூர்யா பேசுகையில், அட்லாண்டா தமிழர்களின் பேராதரவு தன்னை திக்குமுக்காடச் செய்து விட்டதாக குறிப்பிட்டார். "ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றி நிறைய தகவல்கள் வந்து கொண்டிருந்தது. அட்லாண்டா நிகழ்ச்சி பற்றி தெரிந்தவுடன் கலந்து கொள்ள முடிவு செய்தேன்," என்று குறிப்பிட்டார்.
தந்தை சிவகுமார், தம்பி கார்த்தி மற்றும் தன்னுடைய பங்கு என தங்கள் குடும்பத்தின் சார்பில், ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாகத் தெரிவித்தார். டாக்டர் ஜானகிராமன் உட்பட, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் சூர்யாவின் அறிவிப்பு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இது பற்றி சூர்யா முன்னதாக யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.
- இர தினகர்


Click it and Unblock the Notifications











