‘வணங்கான்‘ சூர்யாவுக்கு பதில் அதர்வா?..பாலா எடுத்த அதிரடி முடிவு !
சென்னை : வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்த அந்த கேரக்டரில் அதர்வாவை நடிக்க வைக்க பாலா திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இயக்குநர் பாலாவும், நடிகர் சூர்யாவும் நீண்ட ஆண்டுகளுக்கு பின் வணங்கான் படத்தில் இணைந்தனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய போதே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் பாலாவின் பிறந்தநாள். அன்று வணங்கான் படத்தின் டைட்டில் லுக் வெளியானது.

பாலா அறிக்கை
இதையடுத்து,வணங்கான் படத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று முன் தினம் பாலா ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

சூர்யா விலகினார்
என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

வணங்கான் படப்பணிகள் தொடரும்
நந்தாவில் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான் படப்பணிகள் தொடரும் என பாலா கூறியிருந்தார். இந்த அறிக்கையால் கோலிவுட்டே பெரும் அதிர்ச்சி அடைந்தது இருவருக்கும் இடையே நிலவி வந்த சண்டையை பாலா தம்பி அண்ணன் என கூறி பூசி முழுகிவிட்டார்.

இருவருக்கும் இடையே மனக்கசப்பு
அதாவது வணங்கான் படத்தின் கதையை பாலா சூர்யாவிடம் சொல்லும்போது மிகவும் சுமாராக தான் இருந்திருக்கிறது. அதனால் கதையை இன்னும் கொஞ்சம் வேறுவிதமாக மாற்றுமாறு பாலாவிடம் சூர்யா கூறியதாவும், ஆனால் பாலா சூர்யாவின் பேச்சை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லையாம். மேலும், சூர்யா இந்த படத்தை விரைவாக முடித்துவிட்டு வேறு படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் பாலா படப்பிடிப்பை மாத கணக்கில் இழுத்தது சூர்யாவை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வர இருவரும் சமாதானமாக பிரிந்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில், வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்து, அந்த கதாபாத்திரத்தில் அதர்வாவை நடிக்கவைக்க பாலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் பாலா இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் இது வரையில் எதுவும் வெளியாகவில்லை.நடிகர் அதர்வா இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











