விஜய் ரூட்டு நமக்கு வேண்டாம்... ரசிகர்களுடன் சூர்யா எடுத்த அதிரடி முடிவு...
சென்னை: சூர்யா தற்போது அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், பாலாவின் வணங்கானை தொடர்ந்து வாடிவாசல் படத்தில் இருந்தும் விலகவுள்ளதாக சொல்லப்பட்டது.
இதனிடையே சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்த சூர்யா, அவர்களுடன் முக்கியமான முடிவுகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
சிவா இயக்கும் 'சூர்யா 42' படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனிடையே பாலாவின் வணங்கான் படத்தில் இருந்து பாதியிலேயே விலகினார் சூர்யா. அதேபோல் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இருந்தும் சூர்யா விலகிவிட்டதாக செய்திகள் தீயாகப் பரவின. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யா விலகிவிட்டார் என்ற செய்தி வைரலானது. இதனையடுத்து உடனடியாக இது வதந்தி என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கம் கொடுத்தார்.

ரசிகர்களுடன் மீட்டிங்
மேலும், விரைவில் வாடிவாசல் திரைப்படம் தொடங்கும் எனவும் படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார் சூர்யா. திடீரென ரசிகர்களை சந்தித்த சூர்யா, அவர்களுடன் என்ன பேசினார், எதனால் இந்த மீட்டிங் என்ற கேள்வி எழுந்தது. மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்துப் பேசிய சூர்யா, அப்போது அவர்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கல்விக்காக உதவி
அதன்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகளில் படித்த இளைஞர்கள் இருந்தால், அவர்களின் மேற்படிப்புக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளாராம். அதுமட்டுமின்றி போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இருந்தால், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கவும் முடிவு செய்துள்ளாராம். மேலும், அவர்களுக்கு அரசுத் துறைகளில் வேலை கிடைக்க உதவுவதாவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனது ரசிகரின் மனைவியை மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார் சூர்யா. அதேபோல் தொடர்ந்து பல இளைஞர்களுக்கு கல்வி கற்க நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளாராம்.

வலிமையாகும் அகரம்
ஏற்கனவே சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்கள், மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். அதேபோல் ஏராளமான தன்னார்வத் தொண்டுகளையும் செய்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது ரசிகர்களின் கல்விக்கும் சூர்யா உதவி செய்ய முடிவு செய்திருப்பதை, பலரும் பாராட்டி வருகின்றனர். வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள நிலையில், பனையூரில் தனது ரசிகர்களை சந்தித்தார் விஜய். அப்போது பலரும் விஜய் தனது திரைப்படம் வெளியாகும் போது மட்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார் என விமர்சனம் செய்தனர். ஆனால் சூர்யா விஜய் ரூட்டை ஃபாலோ செய்யாமல், தனது ரசிகர்களின் நலனுக்காக அவர்களை சந்தித்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











