திருடனுங்க இல்லாத ஜாதி இருக்கா? சூர்யாவின் ஆவேச வசனத்துடன் தெறிக்கும் ஜெய் பீம் டீசர்!
சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள ஜெய் பீம் படத்தின் ஆக்ரோஷமான டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் ஒடிடி ரிலீசாக அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.
பழங்குடியின மக்களின் வழக்கு ஒன்றை திரைக்கதையாக உருமாற்றி இயக்குநர் ஞானவேல் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ஜெய் பீம்
அண்ணல் அம்பேத்கரை ஜெய் பீம் என அழைத்து வந்த நிலையில், அந்த தலைப்பில் படத்தின் பெயரை வைத்த இடத்திலேயே சூர்யா ஸ்கோர் செய்துவிட்டார். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடத்தி வரும் 2டி நிறுவனத்தின் சார்பில் உருவாகி உள்ள இந்த படம் வரும் நவம்பர் 2ம் தேதி தீபாவளியை முன்னிட்டு அமேசான் பிரைமில் வெளியாகிறது.

கர்ணன் ஹீரோயின்
மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் தனுஷின் கர்ணன் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஜெய் பீம் டீசர் ரிலீஸ்
விஜயதசமி பண்டிகையான இன்று சூர்யாவின் ஜெய் பீம் டீசர் மதியம் 2 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று படம் போல இந்த படமும் ஹிட்டாகும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

பழங்குடியினர் பிரச்சனை
Scheduled Tribe என சொல்லப்படும் பழங்குடியின மக்களுக்கு நிகழும் பிரச்சனையை வழக்காக ஏற்று அவர்களுக்கான நீதியை வாங்கித் தரும் போராட்டத்தில் நடிகர் சூர்யா ஈடுபடுவது தான் படத்தின் கதை. டீசரின் ஒவ்வொரு காட்சிகளும் பழங்குடியின மக்களின் வலிகளை திரையில் காட்சிகளாக காட்டியுள்ளார் இயக்குநர் ஞானவேல்.

இந்த அரசாங்கத்தை எதிர்த்து
அநாதையா செத்து மடிகிறோம் எப்படியாவது காப்பாத்துங்க சார் என பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு பெண் அழுது புலம்ப எந்த வொரு ஆதாரமும் இல்லாமல் நாம கேஸ் போடுறது வெறும் 3 போலீஸை எதிர்த்து அல்ல இந்த அரசாங்கத்தை எதிர்த்து என சூர்யா பேசும் வசனங்களும் உண்மை கதையின் அடிப்படையில் படம் உருவாகி உள்ளது என்கிற குறிப்பும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

டிரைபல் பொம்பளைய
பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்படும் நீதி அவங்களுக்கு நடந்த அநீதியை விட கொடுமையானது, ஒரு டிரைபல் பொம்பளைய ஹைகோர்ட் வரைக்கும் கொண்டு வந்திருக்க உனக்கு வெட்கமா இல்லை போன்ற வசனங்கள் படம் சொல்லப் போகும் கன்டென்ட் பெருசு என்பதை உணர்த்துகிறது.

திருடனுங்க இல்லாத ஜாதி இருக்கா
இந்த ஜாதியில இருக்கிறவங்க ஈசியா திருட்டு கேஸ்ல கன்வெர்ட் ஆகுறது வழக்கம் சார் என சூர்யாவிடம் ஒருவர் சொல்ல, "திருடனுங்க இல்லாத ஜாதி இருக்கா நட்ராஜ்.. உங்க ஜாதி, என் ஜாதின்னு எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடனுங்க இருக்காங்க" என சூர்யா அழுத்தம் திருத்தமாக பேசும் வசனம் நிச்சயம் பலபேருக்கு சவுக்கடியாய் அமையும் என்றே ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











