சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஜெய் பீம் இயக்குநர்… இந்த முறை என்ன கதைன்னு தெரியுமா?
சென்னை: சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
தசெ ஞானவேல் இயக்கிய இந்தப் படம் 1993ல் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகியிருந்தது.
இந்நிலையில், சூர்யா - தசெ ஞானவேல் கூட்டணி விரைவில் இன்னொரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமேசானில் வெளியான ஜெய் பீம்
சூர்யா நடித்திருந்த 'ஜெய் பீம்' திரைப்படம் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. தசெ ஞானவேல் இயக்கிய இந்தப் படத்தை சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்திருந்தார். சூர்யாவுடன் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், 1993ல் விழுப்புரம் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்தது. லாக்கப் டெத்தில் உயிரிழந்த ராஜாகண்ணு என்பவரின் கதையை இந்தப் படம் வெளிக்காட்டியது.

மீண்டும் இணையும் கூட்டணி
சந்துரு என்ற வழக்கறிஞராக நடித்திருந்த சூர்யாவின் கேரியரில் ஜெய் பீம் மிக முக்கியமான படமாக அமைந்தது. அதேநேரம், ஜெய் பீம் படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, சில காட்சிகள் சர்ச்சையும் ஏற்படுத்தியது. ஆனாலும், இதையெல்லாம் கடந்து ஜெய் பீம் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில், சூர்யா - இயக்குநர் தசெ ஞானவேல் கூட்டணி மீண்டும் இணையுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் ஷூட்டிங் ஸ்டார்ட்
சூர்யா - த செ ஞானவேல் இணையும் இந்தப் படமும் உண்மை கதையை பின்னணியாக வைத்தே உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய் பீம் படம் போன்றே மிக முக்கியமான சம்பவத்தை கையில் எடுக்க உள்ளார்களாம். கதை, திரைக்கதை பணிகளை தசெ ஞானவேல் முடித்து விட்டதாகவும், அடுத்தாண்டு மார்ச் மாதம் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யாவுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வணங்கான், வாடிவாசல்
சூர்யா தற்போது சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதனிடையே பாலா இயக்கும் 'வணங்கான்' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தசெ ஞானவேல் இயக்கும் புதிய படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து 4 படங்களில் கமிட் ஆகியுள்ள சூர்யாவிற்கு, 2023 ரொம்பவே பிஸியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. சூர்யா - தசெ ஞானவேல் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











