வாடிவாசல் பக்கம் போக தயங்கும் சூர்யா... காத்திருக்கும் வெற்றிமாறன்... குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா.
இதன் நடுவே பாலா இயக்கத்தில் நடித்து வந்த வணாங்கான் படத்தில் இருந்து திடீரென விலகினார்.
அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருந்த வாடிவாசல் படத்தில் இருந்தும் விலகியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அது உண்மையில்லை எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது வாடிவாசல் படம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

பிஸி ஷெட்யூலில் சூர்யா
சூர்யா தற்போது அவரது 42வது படமான 'சூர்யா 42'-ல் பிஸியாக நடித்து வருகிறார். சிவா இயக்கும் இந்தப் படம் 3டி டெக்னாலஜியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா பாதியிலேயே விலகிவிட்டார். இதுபற்றி பாலா, சூர்யா இருவருமே அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

வெற்றிமாறனின் வாடிவாசல்
இந்நிலையில், சூர்யா 42 படத்துக்கு பின்னர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' தொடங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உறுதியான இந்தப் படம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக வைத்து உருவாகும் என சொல்லப்பட்டது. செல்லப்பாவின் 'வாடிவாசல்' என்ற நாவலை அடிப்படையாக வைத்து வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தில் இருந்தும் சூர்யா விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதன் தயாரிப்பாள தாணு தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. வாடிவாசல் திரைப்படம் சொன்னபடி உருவாகும் என விளக்கம் கொடுத்திருந்தார்.

மீண்டும் எழுந்த சர்ச்சை
வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்தது. இதனால் விடுதலை முதல் பாகத்தை விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால், அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் வெற்றிமாறன். அதேநேரம் சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் விடுதலை போஸ்ட் புரோடக்ஷனில் பிஸியாக இருப்பதால், சூர்யா புது முடிவு எடுத்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

நடுவில் வந்த சுதா கொங்கரா
அதன்படி ஏற்கனவே சூரரைப் போற்று மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த சுதா கொங்கரா படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளாராம். சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதுகளை வென்ற இந்தக் கூட்டணி, இன்னொரு படத்தில் இணையவுள்ளதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. இது வாடிவாசல் படத்துக்குப் பின்னர் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படம் தான் முதலில் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி சீக்கிரமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனை முடித்துவிட்டு தான் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளாராம். ஒருவேளை அதற்குள் வெற்றிமாறன் வேறொரு படத்தை தொடங்கிவிட்டால் வாடிவாசல் டிராப் ஆகிவிடுமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது தாமதமாகலாம் என்ற அப்டேட் ரசிகர்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











