முதலில் வணங்கான், இப்போ வாடிவாசல்... விலகும் முடிவில் சூர்யா... அதிர்ச்சியில் வெற்றிமாறன்!
சென்னை: சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வரும் சூர்யா, பாலாவின் வணங்கான் படத்தில் இருந்து சமீபத்தில் தான் விலகினார்.
தனது குருவான பாலாவின் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த பின்னரே வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதன்முறையாக இணையவிருந்த வாடிவாசல் படம் குறித்தும் அதிர்ச்சிகரமான அப்டேட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணங்கானில் இருந்து விலகிய சூர்யா
எதற்கும் துணிந்தவன் படத்தைத் தொடர்ந்து தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சிவா இயக்கும் இந்தப் படம் 'சூர்யா 42' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. சூர்யா 42க்கு முன்பே பாலாவின் வணங்கான் படத்தில் கமிட் ஆகியிருந்தார் சூர்யா. சூர்யாவின் கேரியரில் மிகப் பெரிய கம்பேக் கொடுத்த நந்தா, பிதாமகன் படங்களை இயக்கியவர் பாலா. இருவருமே அண்ணன் - தம்பி என்ற பாசப் பிணைப்பில் பழகி வருகின்றனர். இதனால் மீண்டும் இந்தக் கூட்டணியில் உருவாகி வந்த வணங்கான் படத்துக்கு அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிந்த வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார்.

மீண்டும் அதிரடியான முடிவு
வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியது குறித்து பாலாவே முதலில் அறிக்கை வெளிய்ட்டார். அதன்பின்னர் சூர்யாவும் இதுகுறித்து அறிக்கை விட்டு விளக்கம் கொடுத்திருந்தார். இதனால் சூர்யா - பாலா கூட்டணியின் மீது எதிர்பார்ப்பில் இருந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரம் வணங்கான் படத்தின் கதை மீது பாலாவுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய்யை வணங்கான் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இந்த அதிர்ச்சியின் நடுவே சூர்யாவின் இன்னொரு முடிவும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

வாடிவாசல் படத்தில் என்ன பிரச்சினை?
சூர்யா 42 படத்திற்குப் பின்னர் வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. செல்லப்பாவின் 'வாடிவாசல்' என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகும் என சொல்லப்பட்டது. பெரும்பாலும் தனுஷுடன் மட்டுமே கூட்டணி வைக்கும் வெற்றிமாறன், இப்போது விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். இந்த வரிசையில் முதன்முறையாக சூர்யாவுடன் வெற்றிமாறன் இணையவிருப்பது ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்தது. ஆனால், தற்போது வணங்கானைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தில் இருந்தும் சூர்யா விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

என்ன சொல்கிறது படக்குழு?
வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பதாகவும், ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகிருந்தது. அதுமட்டும் இல்லாமல் சூர்யாவை வைத்து டெஸ்ட் சூட்டிங்கும் நடத்தப்பட்டது. இந்த வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகின. சூர்யா 42 படப்பிடிப்பு முடிந்ததும் வாடிவாசல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென சூர்யா விலகுவதாக வெளியான செய்திகள் இணையத்தை சூடாக்கின. ஆனால், இதுகுறித்து வாடிவாசல் படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுதான் உண்மை நிலவரம்
வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகவுள்ளதை படக்குழுவினர் மறுத்துள்ளனர். சூர்யா நடிப்பில் வாடிவாசல் திட்டமிட்டபடி உருவாகும் என்றும், சிவா படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் சூர்யா வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாடிவாசல் படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றையும் படக்குழு விரைவில் வெளியிட உள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











