13 வருஷம் முடிஞ்சு 14-வது வருஷம் பொறந்திருச்சு.... கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!
சென்னை: ஆமாங்க.. கேளுங்க கேளுங்கன்னு சொல்லுற சூரியன் எஃப்எம் இன்று 13-வது ஆண்டினை நிறைவு செய்கிறது.
நம்ம தாத்தா பாட்டிங்க பாட்டு கேக்க ஆரம்பிச்சதே ரேடியோ-ல தாங்க. அதுவும் கிராமங்களில் ஊரு கடைசில ஒரு டீ கடை, அது முன்னாடி "பொட்டி"யைக் கட்டி தொங்க விட்டுருப்பாங்க. அந்த ரேடியோ தான் அன்னைக்கு பாமர மக்கள்ல இருந்து கடைகோடி மக்கள் வர செய்தி சொல்லிட்டு இருந்துச்சு.

அப்புறம் நாகரீகம் மாற மாற, காலத்துக்கு ஏற்றார்போல தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்தது. ஆல் இந்தியா ரேடியோ இப்போ ஆல் இந்தியாவிலும் ரேடியோ என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது.
முன்னாடியெல்லாம் ரேடியோவில் பேசும் குரல் மட்டுமே கேட்கும். ஆனால் தற்போது வளர்ந்துவிட்ட, தொழில்நுட்பம், வளர்ச்சி, திறமை என அனைத்தும் ஒரு சேர இணைந்து அனைவருக்கும் வாய்ப்புகளை அளிக்கின்றது.

உதாரணத்திற்கு நம் வெள்ளித்திரை, சின்னத்திரை-யில் கூட பல முகங்கள், முகம் காட்டா ரேடியோவிலிருந்து முகத்தினை வெளியுலகிற்கு காட்டும் திரைக்கு வந்துள்ளனர். அவ்வளவு ஏங்க, கொஞ்சம் கொஞ்சமா இப்போ முன்னுக்கு வரும் மா கா பா முதலில் ரேடியோவில் தான் தன் பயணத்தை ஆரம்பித்தார்.
"அகில இந்திய சூப்பர் ஸ்டார்" மிர்ச்சி சிவா, மக்கள் மத்தியில் இன்றும் சரவணனாக வாழும் மிர்ச்சி செந்தில், சினிமா மட்டுமில்லாமல், பொது சேவையிலும் பட்டையை கிளப்பும் ஆர் ஜே பாலாஜி, டாடி எனக்கு ஒரு டவுட்டு என கொஞ்சும் குரலில் பிரபலமான ரஞ்சித், சூது கவ்வும் ரமேஷ் திலக் என பெரிய பட்டாளமே ரேடியோவில் தான் அதாவது எப்.எம்மில்தான் தங்களது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இப்போதும் பல இடங்களில் காலையில் சுப்ரபாதம் முதல், இரவு நேர இன்னிசை பாடல்களை கேட்டுகொண்டே நாளினை முடிக்கும் மக்கள் உள்ளனர்.
இந்த ரேடியோ பல மாநிலங்களில் இயங்கினாலும், காலங்கள் மாறினாலும், எவ்வளவுதான் தொழில்நுட்பங்கள் பெருகினாலும், ரேடியோவின் நிலை குன்றாது. நிலைமை மாறாது. அந்த வகையில், இன்று 13-வது பிறந்தநாளை கொண்டாடும் சூரியன் எஃப்பம் -க்கும் அதன் நேயர்களுக்கும் நமது வாழ்த்துகள்... !


Click it and Unblock the Notifications











