சஸ்பென்ஷன், டிரான்ஸ்பர் இதற்கான தண்டனை இல்லை.. நடிகை பிரியா பவானி சங்கர் ’சுளிர்’ போஸ்ட்!
சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணை கைதிகளாக அழைத்துச் சென்ற நிலையில் மரணம் அடைந்தனர்.
போலீசார் சித்ரவதை செய்து அவர்களை லாக்கப் டெத் செய்து விட்டதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊர்க்காரர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் வரை இந்த கொடூரமான சம்பவத்துக்கு நீதி கேட்டு குரல் கொடுத்து வருகின்றனர்.
வாய் திறந்த பிரபலங்கள்
இந்த சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்கும் மேல் ஆகிய நிலையில், கோலிவுட் நடிகர்கள் இந்த விவகாரத்தில் வாய் திறக்க ஆரம்பித்தனர். அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்டுக்கு போலீசாரால் நடைபெற்றது போலவே, இந்த சம்பவத்தை அவர்கள் ஒப்பிட்டு பார்த்து தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஜெயம் ரவி டு அதுல்யா ரவி
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஜெயம் ரவி, ஜீவா, சாந்தனு உள்ளிட்ட நடிகர்களும், பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ராஜு முருகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குநர்களும், ராஷி கன்னா, ஆண்ட்ரியா, வரலக்ஷ்மி சரத்குமார், அதுல்யா ரவி உள்ளிட்ட பல நடிகைகளும் தங்களின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து ட்வீட்களை போட்டு வருகின்றனர்.

தொடர்ந்து டிரெண்டிங்
தொடர்ந்து மூன்று நாட்களாக #JUSTICEFORJAYARAJANDBENNIX என்ற ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பாடகி சுசித்ரா போட்ட ஆங்கில வீடியோ வைரலான நிலையில், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என வட இந்தியாவிலும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

ஆயிரக்கணக்கில் பிரச்சனைகள்
இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர், இந்த விவகாரம் குறித்து விரிவான ஒரு பதிவை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். செய்திவாசிப்பாளராக தனது பணியை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தனது அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். "செய்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் எங்க chief சொன்னாரு, நம்மை சுற்றி அநீதி, பயங்கரங்கள் தினம் ஆயிரக்கணக்கில் நடந்துகிட்டு தான் இருக்கு.

மாற்றத்தை ஏற்படுத்தும்
அப்படி வெளிச்சத்துக்கு வரும் சில பயங்கர பிரச்சனைகள், மேலும் பல பயங்கர பிரச்சனைகள் அது போல நடக்காமல் இருக்க பாடமா இருக்கணும். அதுதான் நாம பாதிக்கப்பட்டவங்களுக்கு செய்யக் கூடியது. சாமானியர்களிடம் காட்டப்படும் அதிகாரத்தின் வீரியம், செல்வாக்கு நிறைந்த குற்றவாளிகளிடம் அடங்கியிருக்கிறது. இது மரணம் இல்லை. கொலை. என அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

சஸ்பென்ஸன்.. டிரான்ஸ்பர் தண்டனை அல்ல
மேலும், Suspension, Transfer இதற்கான தண்டனை இல்லை. அரசாங்கமும், சட்டமும் எடுக்கப்போகும் நடவடிக்கை ஒரு குடும்பத்திற்கு மட்டும் இல்லை ஒட்டுமொத்த சாமானியர்களுக்குமான பதில் #JusticeforJayarajAndFenix என்ற ஹாஷ்டேக்கை போட்டு தனது கண்டனத்தை தெளிவாக பதிவிட்டு இருக்கிறார் நடிகை பவானி சங்கர். மேலும், பல பிரபலங்களும் இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், குற்றம் செய்த போலீஸ்காரர்களை தப்பிக்க விடாமல் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











