சிம்புவுக்கு சீக்கிரம் திருமணம் ஆகணும் சாமி.. கடவுளிடம் வேண்டுதல் வைத்த டி. ராஜேந்தர்!
சென்னை : சிம்புக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்று அவரது தந்தை டி ராஜேந்தர் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் மனமுருகி பிரார்த்தனை செய்துள்ளார்.
நடிகர்,இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் சிலம்பரசன். இவரது ரசிகர்கள் இவரை அன்போடு எஸ்.டி.ஆர் என்று அழைத்து வருகின்றனர்.
சிம்பு எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இவர் சிக்காத சர்ச்சைகளே இல்லை என்று சொல்லலாம்.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் போது, படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரவில்லை, திட்டமிட்டபடி படப்பிடிப்பை சரியான நேரத்தில் முடிக்கவில்லை, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உருவாகின. இதையடுத்து, அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டு, ரெட் கார்டு விதிக்கப்பட்டு, பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ரெட் கார்ட் நீங்கப்பட்டது.

கம்பேக் கொடுத்த சிம்பு
நடிகர் சிம்புக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது மாநாடு, வெங்கட்பிரபு இயக்கத்தில் டைம் லூப் முறையில் வெளியான இந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வெற்றியை வாரிக்குவித்தது.இதையடுத்து, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு 20 கிலோ எடையை குறைத்து 20வயது இளைஞன் போல் இருந்தார். சிம்பு கேங்ஸ்டராக நடித்த இத்திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. அடுத்து பத்து தல திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

விரைவில் திருமணம்
நடிகர் சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாராவுக்கும் ஹன்சிகா மோத்வானிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளதால், சிம்புவின் ரசிகர்கள் எப்போது கல்யாணம் என கேட்டு வருகின்றனர். டிசம்பர் 3ந் தேதியோடு சிம்புக்கு 39 வயதாகி உள்ளதால், அவரது பெற்றோர்களும் சிம்புக்கு திருமணம் செய்துவைக்க ஆர்வமாக உள்ளனர்.

வழக்கறுத்தீஸ்வரர் கோயில்
இந்நிலையில், நடிகரும், சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர், காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் தனது மகன் சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு பூஜை செய்துள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு, மறுபிறவி எடுத்துள்ளேன். பீப் பாடல் விவகாரம் சர்ச்சையாகி மன குழப்பத்தில் இருந்த போது, இந்த வழக்கறுத்தீஸ்வரரிடம் எனது குறைசொல்லி மனம் உருகி பிரார்த்தனை செய்தேன்.ஒருவழியாக அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது.

சிம்புக்கு பிடித்த திருமகள்..
இப்போது என் மனதில் இருக்கும் கவலை சிம்பு திருமணம் தான். எனக்கும், எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதைவிட, எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை ,எங்களது மருமகளாக தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடம் மனம் உருகி கோரிக்கை வைத்து இருக்கிறேன் அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். சிலம்பரசனின் திருமணம் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பல நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் விரைவில் நடக்கும் என நம்புகிறேன் என டி ராஜேந்தர் பேட்டியில் கூறியிருந்தார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











