'ஏ டண்டணக்கா...' ரூ 1 கோடி நஷ்டஈடு கேட்டு இமான், அனிருத் மீது டி ராஜேந்தர் வழக்கு!
‘ரோமியோ ஜூலியட்' படத்தில் ‘டண் டணக்கா... ணக்கா... ணக்கா' என்று துவங்கும் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிருத் (பிரபல இசையமைப்பாளர்), பாடலாசிரியர் ரோகேஷ் (அனேகனில் ‘டங்கா மாரி ஊதாரி...' பாடலை எழுதியவர்), தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி. ராஜேந்தர், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

‘‘டண்டணக்கா...ணக்கா... ணக்கா'
எங்க தல டீயாரு
சென்டிமென்ட்ல தாருமாறு
மைதிலி என்னைக் காதலின்னாரு
அவரு உண்மையா
லவ் பண்ணச் சொன்னாரு
மச்சான்' - அங்க தான்டா
எங்க தல நின்னாரு...''
- என்று துவங்கும் பாடலை ரோகேஷ் எழுதி இருக்கிறார். அனிருத் பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல், அதைப் படமாக்கியுள்ள விதம் தன்னைப் புண்பட்டுத்துவதாகக் கூறி டி ராஜேந்தர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு:
‘தமிழ் சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நடிகர்-டைரக்டர் டி. ராஜேந்தர் தனக்கென்று வித்யாசமான பாணியில் வசனங்களை உச்சரித்து, நடிப்பிலும் தனி ஸ்டைலை உருவாக்கி இருப்பவர். மாநில அரசு, மத்திய அரசின் பல்வேறு விருதுகைளப் பெற்றிருப்பவர். இதேபோல கலைக்கு இவர் ஆற்றி வந்திருக்கும் அரிய சேவைக்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து எண்ணற்ற வசதிகளைக் குவித்திருப்பவர்.
சென்னையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் தயாரிக்கும் படம்-ரோமியோ ஜூலியட். படத்தின் இயக்குனர் லட்சுமணன். இசையமைப்பாளர் டி. இமான். இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல்-‘டண் டணக்கா... ணக்கா... ணக்கா' என்று ஆரம்பமாகிறது. இந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை காப்பியடித்து, ‘இமிடேட்' செய்து பாடியிருக்கிறார்.
பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம்-அவர் குரலிலேயே ஒலிக்கிறது. இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.
இது, பல ஆண்டுகளாக- பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி நடை-ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், ‘காபிரைட்' உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள் என்று டி.ராஜேந்தர் சார்பில் வாரான் அண்ட் சாய்ராம்ஸ் நிறுவனம் (வழக்கறிஞர்கள் தியாகேஸ்வரன், ராமகிருஷ்ணன்) வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இதே பாட்டும், பதிவு செய்யப்படும் காட்சிகளும் ‘யூ ட்யூப்' தளத்திலும், சன் மியூசிக் சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டுள்ளது (ஆடியோ_வீடியோ வடிவில்). படம் திரையிடப்படுவதற்கு முன்னால் இப்படி ஒரு வெளியீடு-‘பெருமைக்குரிய' என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இந்தச் செயலுக்காக_ சட்டத்துக்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் முறையான அனுமதியில்லாமல் அவர் பெயரையும், இமேஜையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தரவேண்டும்.
மேலும் யூ ட்யூப், சன் மியூசிக் சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்," என்று அவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











