சர்ச்சை வேண்டாம்.... தேசிய விருதை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்! - அக்ஷய் குமார்
மும்பை: எனக்கு தேசிய விருது கொடுத்ததில் உடன்பாடில்லை என மக்கள் கருதினால் அதை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளட்டும் என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.
ருஸ்டம் படத்தில் நடித்ததற்காக அக்ஷய் குமாருக்கு 2016-ம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைத்தது. முதல் முறையாக அவர் தேசிய விருது பெறுகிறார்.

ஆனால் அக்ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது நியாயமல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் தேசிய விருது வழங்கியிருப்பதில் மிகுந்த பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கருத்துத் தெரிவித்தனர்.
இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் அக்ஷய் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், "ஒருவர் தேசிய விருதை பெறும்போது அவரைச் சுற்றிலும் விவாதம் நடப்பதை கடந்த 25 ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். இது ஒன்றும் எனக்கு புதிது அல்ல. 'அவருக்கு தேசிய விருது வழங்க கூடாது, மற்றவருக்கு வழங்கி இருக்க வேண்டும்' என்று கூறி சிலர் எப்போதும் சர்ச்சையைக் கிளப்புவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
நடிக்க வந்து 26 ஆண்டுகள் கழித்து தேசிய விருது பெற்றிருக்கிறேன். இந்த விருது பெற நான் தகுதியற்றவன் என்று நீங்கள் கருதினால், அதனை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ளட்டும். வருத்தமில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











