என்னைப் பற்றிய வதந்திகளால் மனம் வேதனையில் துவள்கிறது - மனோரமா

சமீபகாலமாக மனோரமா தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார். கால் வலி காரணமாக அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்போது வலி அதிகமானதால் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பின்னர் குணமடைந்து திருப்பதி சென்றார். அங்கு அவருக்கு விஐபி அறை கொடுக்கப்படவில்லை என்பதால் கோபமடைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் ஊர் திரும்புகையில் அவரது கார் விபத்துக்குள்ளாகி காயமடைந்தார். தற்போது அவர் சாமியாரகப் போகிறார். அவருக்கு மன நிலை சரியில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகி மனோரமாவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் மனோரமா ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் கலை உலகத்தினருக்கும், உலகமெல்லாம் பரவியுள்ள தமிழ் பெருங்குடி ரசிகர்களுக்கும் நான் மனோரமா ஆச்சி' என்றுதான் தெரியும். அதற்கு முன்பு, கோவிந்தம்மாள் என்ற பள்ளத்தூர் பாப்பா என்பதுதான் என் அறிமுக பெயர்.
1950-51-52-53-ம் ஆண்டுகளில், அந்தமான் கைதி என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் அன்றைய பள்ளத்தூர் பாப்பா, மனோரமாவாக உருவானேன். மாலையிட்ட மங்கை என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டேன்.
அதன்பிறகு 52 வருடங்களாக நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் 1,300 படங்களுக்கு மேல் நடித்து, உலக வெற்றியாளர்களின் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றேன்.
பல்கலைக்கழகங்கள் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தின. மத்திய அரசு, பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது. தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. அத்துடன், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கமிட்டியின் அகில இந்திய மகளிர் பிரிவு கவுரவ செயலாளராகவும் அங்கம் வகிக்கிறேன்.
இவ்வளவு சிறப்புகளையும், கவுரவத்தையும் அடைய காரணம், ரசிக பெருமக்களும், என் உயிரினும் மேலான தமிழ் மக்களும்தான்.
சமீபகாலமாக என்னைப்பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை சிலர் பரப்புகிறார்கள். இதனால் என் மனம் வேதனையால் துவள்கிறது. ரசிக பெருமக்கள் மத்தியிலும் என்னைப் பற்றிய குழப்ப நிலை எழுந்துள்ளது.
நான் நன்றாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மனோரமா.


Click it and Unblock the Notifications











