மோடியால் முடங்கிப் போன திரைப்படத் துறை!
பிரதமர் மோடியின் ரூ 500, 1000 நோட்டுகள் ஒழிப்பு அறிவிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது திரைப்படத் துறை.
இந்தியாவில் இந்தி, தெலுங்குக்கு அடுத்து பெரிய திரைப்படத் துறை தமிழ்தான். சராசரியாக ஆண்டுக்கு 200 படங்கள் தயாராகும் தமிழ்த் திரையுலகில், பணம்தான் பிரதானம். குறிப்பாக ரொக்கப் பணம். காசோலைகள் என்றாலே காத தூரம் ஓடுவார்கள் திரையுலகினர்.

ஒரு படத்தின் படப்பிடிப்பு நடக்க ரொக்கம்தான் முக்கியம். படப்பிடிப்பு முடியும் தருவாயில், கலைஞர்களுக்கு, தினப்படி சம்பளம் பெறும் நடிகர்களுக்கு, உணவு பரிமாறுவோர் உள்ளிட்ட அடிப்படைத் தொழிலாளர்களுக்கு... என அத்தனைப் பேருக்கும் ரொக்கப் பணம் கொடுத்தாக வேண்டும்.
அதேபோல பல்வேறு திரைப்படப் பணிகள், பின் தயாரிப்பு வேலைகள் நடக்க ரொக்கம்தான் பிரதானம். கடன் சொல்லுவதெல்லாம் ரொம்ப அரிதான விஷயம்.
இதெல்லாவற்றையும்விட முக்கியம் பட வெளியீடு. படத்தை தியேட்டருக்குக் கொண்டு சேர்க்கும் வரை பல்வேறு செலவுகள், சரிகட்டல்கள், பேரங்கள், பஞ்சாயத்துகள் நடக்கும். இதற்கெல்லாம் ரொக்கம் முக்கியம்.
திரையுலகில் பெரும்பாலும் ரூ 500, 1000 நோட்டுகள்தான் புழக்கத்தில் இருக்கும். இந்தப் பணத்தை செல்லாது என்று சொல்லிவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் கைப் பிசைந்து நிற்கின்றனர் திரையுலகினர்.
2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் சிக்கல், ஒரு நாளைக்கு ரூ 4500-க்கு மேல் எடுக்கமுடியாத இம்சை... எனவே பல படப்பிடிப்புகள் சத்தமின்றி நின்றுவிட்டன. நடக்கும் படப்பிடிப்புகளிலோ இன்னமும் பழைய 500, 1000 தாள்கள்தான் செலாவணியாகிக் கொண்டிருக்கின்றன.
படத்தை இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வெளியிடத் தயாராக இருந்த தயாரிப்பாளர்கள் பின்வாங்கிவிட்டனர். புதிய பட ஷூட்டிங்கை ஆரம்பிக்க இருந்தவர்களும் அந்தத் திட்டத்தை அப்படியே கைவிட்டுவிட்டு, வங்கி க்யூவை கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











