'ஐ.சி.யூ-வில் கிடக்கும் தமிழ் சினிமாவை காப்பாத்துங்க' - எஸ்.பி.முத்துராமன் வேண்டுகோள்!
சென்னை : தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுப்படி நடைபெற்று வரும் ஸ்ட்ரைக் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் முடங்கிக் கிடக்கிறது. சினிமாவை மட்டுமே நம்பியிருக்கும் சில லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
சினிமா எனும் மிகப்பெரும் வணிகம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி நஷ்டமாகி உள்ளது. ஷூட்டிங் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டதால் செட் போட்டு படப்பிடிப்புக்கு காத்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய சூழலில் ஸ்ட்ரைக் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. இந்த மாதம் முழுக்க வேலைநிறுத்தம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது,
"தமிழ் திரைப்படத் துறை தற்போது பலவீனமாகி விட்டது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து, அது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. விட்டால், அத்துறையின் மொத்த உயிரும் போய் விடும்.
அதனால், இந்தத் துறையைக் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் அனைத்து விதமான அவசர சிகிச்சைகளையும் கூடுதல் சிரத்தையுடன் எடுக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக இருந்து, இந்தத் துறையைக் காப்பாற்றப் போராடுவதோடு, அனைத்துவிதமான உதவிகளையும் ஒருசேர செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











