பிப்ரவரி 5-ம் தேதி தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்!
சென்னை: தமிழ் சினிமாவின் பலம் மிக்க அமைப்பான தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை சங்கத்தின் இப்போதைய தலைவர் கலைப்புலி தாணு அறிவித்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவராக கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.

இந்த நிர்வாகத்தில்தான் இரண்டு ஆண்டு காலமும் தயாரிப்பாளர் சங்கத்தில் கோஷ்டி பூசல், வழக்குகள் என எதுவும் இல்லாமல் நிர்வாகம் அமைதியாக நடந்தது.
இவர்கள் பதவி காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நேற்று இரவு சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிப்ரவரி 5-ந் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
சங்கத்தில் 1201 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாக்களித்து புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யவிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











