எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!
தமிழ் சினிமா மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை முதல்வராக்கியது. அவர் தமிழக முதல்வராக இருந்தவரை தமிழ் சினிமா வளர்ச்சியை தன் முன்னேற்றமாக முன் எடுத்துச் சென்றார். அவரது 100வது பிறந்த நாள் தமிழகமெங்கும் ஆரவாரத்துடன் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு கொண்டாடி வருகிறது.
எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் சினிமாவின் பிரதான துறையான தியேட்டர்கள் கடந்த மூன்று தினங்களாக மூடப்பட்டுள்ளன. நூற்றாண்டு தமிழ் சினிமா வரலாற்றில் இது போன்று தொடர்ச்சியாக தியேட்டர்கள் மூடப்பட்டது எம்.ஜி.ஆர் மரணத்தின் போது அவருக்கு அஞ்சலி செலுத்த, அதுவும் அவர்களாக மூடினார்கள். இப்போதோ அவரது பிறந்த நாள் நூற்றாண்டில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நியாயம் கேட்டு தியேட்டர்கள் அடைக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நாட்களில் 60 கோடி ரூபாய் பண புழக்கம் தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை நம்பி நேரடியாக, மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்ற 3 லட்சம் பேர் வேலை இன்றி உள்ளனர்.
சினிமாவால் மக்கள் செல்வாக்கு பெற்று ஆட்சியை பிடித்தவர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா இருவரும். அவர்களின் அடிப்பொடிகளாக அடிமைகளாக இருந்தவர்கள், ஜெயலலிதா மறைவுக்கு பின் அசுர பலம் பெற்ற அமைச்சர்களாக உருவெடுத்த பின் வெகுஜன மக்கள் பிரச்சினைகள் ஏளனமாக பார்க்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படுகிறது.
அதன் தொடர்ச்சிதான் சினிமாவுக்கு அராஜகமாக விதிக்கபட்டுள்ள 30 சதவீத கேளிக்கை வரி. GSTவரி நடைமுறைக்கு வருவதையொட்டி பல மாநில அரசுகள் கேளிக்கை வரியை ரத்து செய்துள்ளன. சில மாநில அரசுகள் குறைத்திருக்கின்றன. தமிழக அரசு சம்பந்தபட்ட திரைத்துறையினரிடம் கலந்து பேசாமல் 30% கேளிக்கை வரியை உள்ளாட்சி அமைப்புகள் வசூலித்துக் கொள்ள சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் லோக்கல் ஆளும் அரசியல் கட்சியினர் தியேட்டர்களில் ஆதிக்கம் செலுத்த கதவு திறந்துவிட்டிருக்கிறது.
58 சதவீத வரி செலுத்தி தொழில் நடத்த முடியாது என்பதால் உள்குத்து வேலைகளால் பிளவுபட்டு இருந்த திரையுலகம் ஒரணியில் திரண்டு தமிழக அரசிடம் கேளிக்கை வரியை ரத்து செய்ய கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள் அமைச்சர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து நடிகர்களுமே பொது வெளியில் அரசை விமர்சிக்கத் தொடங்கி விட்டனர். பொது பிரச்சினைகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு சிக்கல் வருவதற்கு முன்பு சினிமாகாரர்களுக்கு செக் வைக்க விரும்பிய ஆளுங்கட்சி கேளிக்கை வரியை வைத்து தொழிலை முடக்கப் பார்க்கிறது. இதுதான் கள யதார்த்தம். ஆனால் பலருக்கும் தெரியாத சமாச்சாரம்.
இதிலிருந்து மீண்டு வர முன்னணி நடிகர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். ரஜினி ரொம்பவே விவரமாக மாநில அரசின் தலையில் டீசன்டாகக் குட்டியுள்ளார். கமலோ, வா நண்பா சேர்ந்து களமிறங்கலாம் என ரஜினியை அழைத்துள்ளார். இது அரசு மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லோக்கல் ஆளுங்கட்சி தியேட்டரில் எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்தும்...?
அடுத்த கட்டுரையில்...
- ராமானுஜம்


Click it and Unblock the Notifications











