வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை.. தமிழ்நாடு அரசு உத்தரவு.. டிக்கெட் விலைக்கும்!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தியேட்டரில் கட் அவுட் வைக்கவும், பால் அபிஷேகம் செய்யவும் தடை விதித்துள்ளது.
அதிக டிக்கெட் விலை தொடர்பான புகார்கள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் ஷோ
நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ளன. அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கு வெளியாகிறது. விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது. ஜனவரி 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை சிறப்பு காட்சிகளை வெளியிட இரண்டு படக்குழுவும் முடிவு செய்திருந்தது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை
இந்நிலையில், விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14, 15 மற்றும் 16ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பால் அபிஷேகம் கூடாது
மேலும், திரையரங்குகளில் உள்ள விஜய், அஜித் படங்களின் பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் காட்சியில் பாலாபிஷேகம் செய்வதற்காக பால் வண்டிகளில் இருந்து பால் திருடும் நிலை உருவாகலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக டிக்கெட் விலை
இதுமட்டுமின்றி அதிக டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்தால் வாரிசு மற்றும் துணிவு படக்குழுக்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்துக்கு அதிக டிக்கெட் விற்ற நிலையில், அதற்கான அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதிக டிக்கெட்டுகள் தொடர்பாக புகார் வெளியானால் தியேட்டர் நிர்வாகங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











