சாதனைகளோடும் சர்ச்சைகளோடும் 10 ஆண்டுகளை கடந்த சந்தோஷ் நாராயணன்: ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?
சென்னை: தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் சந்தோஷ் நாராயணன்.
Recommended Video
'அட்டகத்தி' படத்தில் தொடங்கிய சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் சந்தோஷ் நாராயணன் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

இசையின் புதிய அலை
இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், பரத்வாஜ் என தமிழ்த் திரையுலகை இசை ஜாம்பவான்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் புதிய அலையாக அடியெடுத்து வைத்தார் சந்தோஷ் நாராயணன். பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தியில் அறிமுகமான சந்தோஷ், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். 'ஆசை ஒரு புல்வெளி' என மெலடியால் வருடிய அவர், 'ஆடிப் போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல" என்ற பாடல்களில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தார்.

மாஸ் கிளப்பிய பீஜிஎம்
'அட்டகத்தி' கொடுத்த சிறப்பான அறிமுகத்தால், அடுத்ததாக விஜய் சேதுபதி நடித்த 'பீட்சா', 'சூது கவ்வும்' படங்களில் கமிட் ஆனார். ஹாரர் திரில்லராக உருவான பீட்சாவில் பாடல்களோடு, பின்னணி இசையும் தூள் கிளப்பியது. அதைவிட 'சூது கவ்வும்' படத்தில் விஜய் சேதுபதிக்காக அவர் போட்ட பீஜிஎம், பலரது செல்போனில் ரிங்டோனாக அலங்கரித்தது. 'ஜிகர்தண்டா' படத்திலும் இதேபாணியில் பட்டையைக் கிளப்பினார் சந்தோஷ்.

ரொமாண்டிக் மெலடியின் மன்மதன்
தமிழ் சினிமாவில் மெலடிப் பாடல்களில் புதுமையான வடிவத்தை கொடுத்ததில் சந்தோஷ் நாராயணன் மிக முக்கியமானவர். 'குக்கூ', 'இறுதிச் சுற்று', 'காதலும் கடந்து போகும்' 'கபாலி' 'காலா', 'ஜிப்ஸி' படங்களில் இடம்பெற்ற மெலடிப் பாடல்கள் அனைத்தும், ரசிகர்களின் மனதோடு மனதாக ரொம்பவே நெருக்கமாகிவிடும். தென்றலின் வருடலுக்கு இணையான சந்தோஷின் இசைக் கோர்வைக்கு முன்னர், கிறங்காதவர்கள் இருக்க முடியாது.

ரஞ்சித்துடனான நட்பும் பிரிவும்
பா. ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் இருவரும் ஒன்றாகவே சினிமாவில் அறிமுகமாகினர். இவர்கள் கூட்டணியில் 'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக கபாலி, காலா படங்களில் ரஜினிக்கான பீஜிஎம், சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இணைபிரியாத நண்பர்களாக இருந்த ரஞ்சித்தும் சந்தோஷ் நாராயணனும், தற்போது பிரிந்துவிட்டனர்.

அறிவு தான் காரணமா?
தெருக்குரல் அறிவை சந்தோஷ் நாராயணன் புறக்கணித்ததே, ரஞ்சித் அவரை விட்டு பிரிய காரணம் என சொல்லப்படுகிறது. ஆனாலும், இதை மனதில் வைத்துக்கொள்ளாத சந்தோஷ் நாராயணன், சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ரஞ்சித்துக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இன்னும் இதுபோல தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் சந்தோஷ் நாராயணன். இதனால், அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சந்தோஷ் நாராயணன், தொடர்ந்து பல மெலடிகளை கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. மேலும், இனியாவது சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதோடு, ரஞ்சித்துடனும் விரைவில் இணைய வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அதனுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சந்தோஷ் நாராயணனுக்கு, அவர்கள் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











