காணாமல் போகும் ரூ 5 கோடிக்காக ஒரு ‘தகிடுதத்தோம்’!
ரஸ்டிக் டேய்ல்ஸ் என்டர்டெய்மெண்ட் பட நிறுவனம் சார்பில் அஜய் வாசுதேவ் பணிக்கர் தயாரிக்கும் படம் ‘தகிடுதத்தோம்'.
சூது கவ்வும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த யோக் ஜேப்பி முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் பல விளம்பர படங்களில் நடித்த மும்பை அழகி அலீஸா கான், நாடோடிகள் பரணி, பிரமிட் நடராஜன், எம்.எஸ்.பாஸ்கர், கராத்தே ராஜா, ஆர்யன், கோவை சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜெய் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு அல் ஆலீஜ் இசையமைக்கிறார். டாக்டர் ராஜேஷ்.வி பாடல்கள் எழுத, எம்.ஜி.காளிதாஸ், உன்னி பாலடு இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே.ஜே.வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கம் ராஜா. இணைத் தயாரிப்பு கார்த்திக் கண்டேரி, நவீன், பிரவீன் படிக்கேரியா.

ஒரு அனாதை ஆசிரமத்தின் இடத்தை காலி செய்ய ஐந்து கோடி ஒரு முக்கிய புள்ளிக்கு கிடைக்கிறது. அந்தப் பணம் திடீர் என்று காணாமல் போகிறது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்கிற விசாரணையில் ஒரு கணவன் மனைவி, ஒரு கேங்க்ஸ்டர் குழு, ஒரு அப்பாவி அனாதை ஆசிரம இளைஞன் ஆகியோரை சந்தேகப்பட்டு விசாரிக்கின்றனர். அந்தப் பணத்தை எடுத்தது யார்? பணத்தின் பின்னணி என்ன? அந்த ஆசிரம இடம் என்ன ஆகிறது? என்பது கதை.

ஒவ்வொரு காட்சியிலும் முடிச்சு மேல் முடிச்சு என்று சஸ்பென்ஸ் கலந்த யூகிக்க முடியாத பரபரப்பான திரைக்கதையுடன், விறுவிறுப்பான படமாக இயக்கி இருக்கிறாராம் ஜெய் கிருஷ்ணன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றி பல இடங்களில் நடந்துள்ளது. கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் பாடல் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











