Thandakaaranyam X Review: தண்டகாரண்யம் ட்விட்டர் விமர்சனம்.. கெத்து தினேஷ் மீண்டும் கலக்கினாரா?
சென்னை: பா. ரஞ்சித் தயாரிப்பில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள தண்டகாரண்யம் படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடைபெற்ற நிலையில், எக்ஸ் தள பக்கத்தில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
பா. ரஞ்சித் தனது நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக பல நல்ல கதைகளை படங்களாக கொடுத்து வருகிறார். அந்த படங்கள் கமர்ஷியல் வெற்றியை பெரிதாக பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியான வெற்றியை பெற்று வருகின்றன.

லப்பர் பந்து படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அட்டகத்தி தினேஷை கெத்து தினேஷாக மாற்றி வெற்றிவாகை சூடியது. இந்நிலையில், தண்டகாரண்யம் படம் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமையுமா என்பது குறித்தும் படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள் குறித்தும் இங்கே விரிவாக பார்க்கலாம்.
இயக்குநர் சேரன் விமர்சனம்: "நேற்று 'தண்டகாரண்யம்' பார்த்தேன். அதிகாரம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் எளியவர்கள் வாழ்வில் ஊடுருவி நம்மை முன்னேறவிடாமல் அடிமைகளாக்குகிறது என்பதை சொல்லும் ஆகச்சிறந்த படைப்பு தோழர் #அதியன்ஆதிரை யின் திரைக்கதையும் உருவாக்கமும் அவரை தமிழின் மிகச்சிறந்த இயக்குனராக ஆக்குகிறது.
அப்படி ஒரு இயக்குனரை அடையாளம் கண்டதற்கும், அவருடைய சிந்தனைகளை படமாக்கும் வாய்ப்பை தொடர்ந்து உருவாக்கி தருவதற்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரண்டு மணி நேரம் படம் ஏற்படுத்திய வலியை கடக்கவே இரண்டு வாரங்கள் ஆகும்போல.. சிந்திப்போம் சிவப்பு வர்ணம் மட்டுமல்ல என்பதை.." என இயக்குநர் பா. ரஞ்சித்தை டேக் செய்து கூறியுள்ளார் சேரன்.
ரமேஷ் பாலா விமர்சனம்: நக்சல்களை வேட்டையாடுகிறோம் என்கிற பெயரில் நடுத்தர வர்க்க மக்களை அரசு அதிகாரம் எப்படி எல்லாம் வேட்டையாடுகிறது என்கிற கதையை எடுத்துக் கொண்டு இயக்குநர் அதியன் ஆதிரை இப்படியொரு தரமான படத்தைக் கொடுத்துள்ளார் என்றும் 5க்கு 3.75 ரேட்டிங் என்றும் ரமேஷ் பாலா கொடுத்துள்ளார்.
துணிச்சலான படைப்பு: "நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு நடத்தும் போலி படுகொலைகளை துணிச்சலுடன் அம்பலப்படுத்தியுள்ளது தண்டகாரண்யம் திரைப்படம்..." என சிபிஐஎம் சண்முகம் தனது ஆதரவை இந்த படத்துக்கு கொடுத்துள்ளார்.
குரலற்றவர்களின் குரலாக: போலி என்கவுன்ட்டர்கள் மூலம் இளைஞர்கள் எப்படி கொல்லப்படுகிறார்கள் என்கிற கதையை மையமாக வைத்து இந்த தண்டகாரண்யம் படத்தை காத்திரமாக இயக்குநர் அதியன் ஆதிரை உருவாக்கியுள்ளார் என்றும் குரலற்றவர்களின் குரலாக சொல்லப்படாத கதையையும் வலியையும் கண்டிப்பாக இந்த படம் கடத்தும் என ராஜசேகர் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 19ம் தேதி வெளியாகும் இந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெற வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











