தாங்கவே முடியவில்லை.. கொரோனாவால் உறவினர்கள் செத்து மடிகின்றனர்.. இயக்குநர் தங்கர் பச்சான் உருக்கம்
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக உறவினர் ஒருவரை இழந்து தவித்து வரும் இயக்குநர் தங்கர் பச்சான் தமிழக அரசுக்கு உருக்கமான ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட தரமான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான்.
கடலூர், பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை எனும் ஊரில் பிறந்த தங்கர் பச்சான், தற்போது தனது சொந்த ஊரில் கிராம மக்களாகிய தனது சொந்தங்கள் கொரோனாவுக்கு இரையாகி வருவதாக மன வேதனை அடைந்துள்ளார்.

தங்கர் பச்சான்
மழைச்சாரல் எனும் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் தங்கர் பச்சான். மோகமுள், பாரதி, காதல் கோட்டை உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்த இவர், நடிகர் பார்த்திபன் நடிப்பில் அழகி எனும் படத்தை இயக்கி இயக்குநராகவும் தனது முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்தார்.

உறவினர் மரணம்
தனது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் நெருங்கிய உறவினர் ஒருவரை கொரோனாவுக்கு வாரிக் கொடுத்து விட்டதாகவும், மேலும், இரு உறவினர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர் என்றும் மன வேதனையுடன் உருக்கமான ஒரு கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளார் தங்கர் பச்சான்.

ஆக்ஸிஜன் படுக்கை எங்கே
சிதம்பரம் முதல் சென்னை வரை தேடிப் பார்த்தும் ஆக்ஸிஜன் படுக்கையுடன் கூடிய மருத்துவமனை கிடைக்கவில்லை என்றும், கிராமத்தில் கொரோனாவுக்கு பாதிக்கபடும் மக்களை சென்னைக்கு கொண்டு வர நினைத்தாலும் ஆம்புலன்ஸில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆக்ஸிஜன் இருக்காது என்றும் கூறுவதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

ரொம்ப கஷ்டமா இருக்கு
நான் என் உறவினர் ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக இந்த கோரிக்கையை வைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் இதே நிலை தான். கொரோனா பரிசோதனை மையத்திற்கு செல்லவே பல இடங்களில் 20 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டி இருக்கிறது. பின்னர் 3 நாட்கள் கழித்துத் தான் ரிசல்ட் வருகிறது. அதற்குள் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. தொடரும் மரணங்களால் மனம் மிகவும் வேதனை கொள்கிறது என உருகியுள்ளார்.

உடனடி நடவடிக்கை
அரசு அலுவலகங்களை மருத்துவமனைகளாகவும் கொரோனா சிகிச்சை மையங்களாகவும் மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் கூறியிருப்பது சற்றே ஆறுதல் தருகிறது. ஆனாலும், கிராமப் புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை காக்க கூடுதல் வேகத்தையும் அக்கறையையும் இந்த அரசு காட்ட வேண்டும் என்றும் இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











