ஜெயம் ரவியைத் தொடர்ந்து... ராம் சரணுக்கு வில்லனாக மாறும் அரவிந்த் சாமி
ஹைதராபாத்: தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரணை அலட்டிக் கொள்ளாமல் எதிர்க்கும் வில்லனாக, அரவிந்த் சாமி நடிக்கிறார் என்று உறுதியான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமே நாயகனுக்கு இணையாக வில்லனுக்கும் படத்தில் காட்சிகளை அமைத்தது தான் என்று விமர்சனங்கள் எழுந்தன.

தனி ஒருவன் ஜெயம் ரவியா அல்லது அரவிந்த் சாமியா என்று சமூக வலைதளங்களில் பலரும் பட்டிமன்றமே நடத்தினர். அந்த அளவிற்கு தனது அலட்டிக் கொள்ளாத வில்லன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார் அரவிந்த் சாமி.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக ராம் சரணும், வில்லனாக மாதவனும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் மாதவன் நான் நடிக்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்து விட்டார்.
இதனால் அந்தப் பாத்திரத்தில் நடிப்பது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழில் அட்டகாசம் செய்த அரவிந்த் சாமியே தெலுங்கிலும் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்தப் பாத்திரத்தில் நாகார்ஜுனாவை நடிக்க வைக்க படக்குழுவினர் எண்ணியிருந்தனர். ஆனால் அரவிந்த் சாமியின் நடிப்பு அவர்களைக் கவர்ந்ததால் அரவிந்த் சாமியிடம் பேசி அவரையே நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அரவிந்த் சாமி ஒத்துக் கொண்டாலும் கூட முறையான அறிவிப்புகள் அடுத்த வருடம் தான் வெளியாகுமாம். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தை என்வி பிரசாத் மற்றும் அல்லு அரவிந்த் ஆகியோர் தயாரிக்கவிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











