வெள்ளம் பாதித்த மக்களுக்கு விளம்பரமில்லாமல் உதவினார் ரஜினி!- கலைப்புலி தாணு சொல்கிறார்
மழையில் பாதித்த மக்களுக்கு விளம்பரமில்லாமல் உதவியவர் ரஜினிகாந்த். அவரது ரசிகர்கள் 'மலரட்டும் மனிதநேயம்' என்ற பெயரில் மாநாடு நடத்துவது பொருத்தமானது, ரஜினிக்குப் பெருமை சேர்ப்பது என்றார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறினார்.
ரஜினி ரசிகர்கள் சோளிங்கரில் மலரட்டும் மனிதநேயம் என்ற பெயரில் மிகப் பெரிய மாநாடு ஒன்றினை நடத்தினர்.
இந்த மாநாட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்தனர். திரையுலகப் பிரமுகர்களும் வந்திருந்தனர். மாநாட்டில் தயாரிப்பாளர் தாணு பேசுகையில், "மனிதநேயம் பற்றி ரஜினி ரசிகர்கள் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

வலது கை கொடுப்பதை இடது கை அறியாத வகையில் கொடுத்து உதவுபவர் ரஜினி.
இப்போது அவரை வைத்து நான் கபாலி படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரு நாள் அவரைப் பார்க்க ராகவேந்திரா மண்டபத்துக்குச் சென்றிருந்தேன்.
மண்டபத்தில் வழக்கத்துக்கு மாறாக நிறையப் பேர் இருந்தனர். எல்லோரும் துப்புரவுத் தொழிலாளர்கள். அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் ஆங்காங்கே கிடந்தன.
நான் ரஜினியைப் பார்த்தபோது, ஏன் இவர்கள் எல்லோரும் இங்கே இருக்கிறார்கள்? என்று கேட்டேன்.
அதற்கு ரஜினி, "மழையால் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை நகரைச் சுத்தம் செய்ய வந்திருக்கும் தொழிலாளர்கள் இவர்கள். இவர்கள் வேலை முடியும் நாள் வரை இங்கேயே தங்கி இருக்கச் சொல்லிவிட்டேன். உணவும் தேவையான வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம்," என்றார்.
அதேபோல வெள்ளம் பாதித்த அனைத்துப் பகுதிகளுக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை ரஜினி அனுப்பி வைத்ததையும் அன்றுதான் தெரிந்து கொண்டேன்.
எந்த விளம்பரமும் இல்லாமல் இவ்வளவு உதவிகளையும் செய்துவிட்டு எதுவுமே தெரியாதவர் மாதிரி உட்கார்ந்திருந்தார் ரஜினி. நான் சிலிர்த்துவிட்டேன்.
அந்த மனிதநேயத்துக்கு இது ஏற்ற மாநாடுதான்," என்றார் தாணு.


Click it and Unblock the Notifications











