ஜீவனாம்சம்: டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது வழக்குத் தொடர தாராவுக்கு ஆலோசனை!

நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா காதல் விவகாரம் சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர்கள் விவகாரம் குடும்பநல நீதிமன்றம் வரைக்கும் வந்தது. இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. பைனலாக 'செட்டில்' ஆகவில்லை.
இந்த நிலையில் நடிகர் பிரபுதேவாவின் தந்தையான டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், திருமணத்துக்கு முன்பு செய்த லீலைகள் வெளிவந்துள்ளன. தன்னை காதலித்து கர்ப்பிணியாக்கி, பின்னர் திருமணமும் செய்து கொண்ட சுந்தரம், பின்னர் ஏமாற்றிவிட்டுப் போய் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக டான்ஸ் மாஸ்டர் தாரா முறையிட்டிருந்தார்.
2 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடத்தப்படும், சமரச தீர்வு மையத்தில் தாரா இந்தப் புகாரைக் கொடுத்தார். அது சில தினங்களுக்கு முன்புதான் மீடியா வெளிச்சத்துக்கு வந்தது.
தன்னையும் தனது மகனையும் கடந்த பல ஆண்டுகளாக சுந்தரம் பராமரித்து வந்தார் என்றும் தற்போது குடும்பத்தை நடத்துவதற்கு நிதியுதவி செய்வதில்லை என்றும் புகார் மனுவில் தாரா கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து குடும்பத்தை பராமரிப்பதற்காக ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளார்.
இந்த மனு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி சுந்தரத்துக்கு பலமுறை சமரச தீர்வு மையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நோட்டீஸ் அடிப்படையில் அவர் ஆஜராகவில்லை.
அதைத் தொடர்ந்து தாராவுக்கு சமரச தீர்வு மையம் ஆலோசனை வழங்கியது. இந்த புகார் மனுவை வழக்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று தாராவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கைவசம் எக்கச்சக்க ஆதாரங்கள் இருப்பதால் விரைவில் வழக்கு தொடரப் போகிறாராம் தாரா.


Click it and Unblock the Notifications











