அஞ்சாதே போன்று துப்பறிவாளனில் எமோஷனல் கனெக்ட் இல்லை: பிரபல இயக்குனர்
சென்னை: துப்பறிவாளன் படம் பற்றிய தனது கருத்தை இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று ரிலீஸானது. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் தனது கருத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
படம் குறித்து அவர் கூறியிருப்பதாவது,

துப்பறிவாளன்
மிஷ்கின்-னின் துப்பறிவாளன். விஷால் சாரின் விஎப்எப் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. இந்த திரைப்படத்தின் காட்சியமைப்புகள் உலகத்தரத்திற்கு இணையாக இருந்தது. ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு ஆங்கிலப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வை தந்தது. கார்த்திக்கின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக இருந்தது.

அஞ்சாதே
இந்த திரைப்படத்தின் அனுபவம் எனக்கு நானே எழுதிக் கொண்ட தேர்வைப் போல உணர்கிறேன். ஏனென்றால், நானும், எனது தங்கையும் இத்திரைப்படத்தை Pre-view show-வில் பார்த்தோம். மிகவும் பிரம்மிக்கும் வகையில் இத்திரைப்படம் படம்பிடிக்கப்பட்டிருந்தாலும், அஞ்சாதே படம் பார்த்தபோது இருந்த ஒரு எமோஷனல் கனெக்ட் இத்திரைப்படத்தில் எனக்கு ஏற்படவில்லை. ஆகவே வணிக ரீதியான வெற்றியை இத்திரைப்படம் பெறுமா என்ற யோசனையுடன் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது என் தங்கையிடம் படம் எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கு என் தங்கை படம் மிக நன்றாகவும் விறு விறுப்பாகவும் இருந்தது என்று கூறினாள்.

ரசிப்பு
இது போன்று சில சமயங்களில் நான் படத்தை ரசிப்பதற்கும், ரசிகர்களாகிய நீங்கள் ரசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. 'கோலிசோடா' படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று Pre-view-வில் படம் பார்க்கும்போது தெரியவில்லை. 'ஜீவா' படம் பெரிய வெற்றி அடையும் என்று நம்பியிருந்தேன். ஆனால் அத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இதுபோல் சில விஷயங்கள் நம் எதிர்பார்பிற்கு எதிர்மறையாக நடக்கும்.

கருத்து
துப்பறிவாளன் படம் பற்றி என் தங்கையின் கருத்த கேட்ட பின், ரசிகர்களின் எதிர்பார்ப்பிலிருந்து நாம் விலகி இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை அது ஏற்படுத்தியது. எனவே இத்திரைப்படத்தின் வெற்றியை எனக்கு நானே வைத்துக் கொள்ளும் தேர்வாக நினைக்கிறேன். மீண்டும் இத்திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்று டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளேன்.

விமர்சனமா
இது துப்பறிவாளன் படத்திற்கான வாழ்த்து மடலா? அல்லது விமர்சனமா? என்று யாரும் கேட்க வேண்டாம். இப்படம் பற்றிய என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார நினைக்கிறேன் என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











