Thaththuvamasi 4: கூலி படத்தில் உருப்படியான மோனிகா பாட்டுல இத்தனை விஷயங்கள் இருக்கா?
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் கூலி. இந்த படம் வெளியாகி ஒரு மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. கடந்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தில் பல காட்சிகளுக்கு ரசிகர்களுக்கு இப்போது வரை விடை தெரியவில்லை. திரைக்கதைக்கு ஏற்றவாறு படத்தில் உருப்படியான காட்சிகள் என்று பொறுக்கிப் போட்டாலே 10 காட்சிகள் தேருமா என்பது சந்தேகம்தான். இப்படி இருக்கும்போது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான மோனிகா பாடல் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான இந்த பாடலை, விஷ்ணு எடவன் எழுதிய இந்த பாடலை பாடகர் சுபலாஷினி பாடியுள்ளார். இப்படி இருக்கையில் மோனிகா பாடல் பக்காவான கிளாமர் பாடல் என்றாலும், அதில் உள்ள வரிகள் என்பது கிளாமர் பாடலுக்கு ஏற்ற வகையில் இருந்தாலும், வாழ்க்கைக்கு சில அறிவுரைகளை வழங்கும் தத்துவங்களையும் உள்ளடக்கி உள்ளது. அப்படி அந்த பாடலில் என்னென்ன தத்துவங்கள் உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளில் பாடலில் இறுதியில் அமைந்துள்ள வரிகள் தான் வாழ்க்கைக்கு உகந்த, சில தன்னம்பிக்கை ஊட்டுகிற வகையில் உள்ளது. அதாவது,
"உரசாம பத்திக்கவா
உதட்டோரம் தித்திக்கவா
இருக்காத ஒத்தையில ஒத்தையில" - என்ற வரிகளில் உள்ள தத்துவம் என்பது, வாழ்க்கையில் எப்போதும் தனியாக இருக்க கூடாது. வாழ்க்கைத் துணை என்பது மிகவும் முக்கியம். ஏற்கனவே உள்ள வாழ்க்கைத்துணையை பிரிய நேரிட்டால் கூட, மீண்டும் தனது மனத்திற்கு ஒத்துப்போகிற வாழ்க்கை துணையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இந்த வரிகள் பாடலில் போகிற போக்கில் உள்ள வரிகள் என்றாலும், மிகவும் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள வரிகளாக உள்ளன.
அதேபோல் உள்ள மற்றொரு வரிகள் என்றால், அது -
" சாகும் நேரத்தில்
பொலம்பி அழுவாத
பூஜை ஆட்டத்தில்
இன்னோசென்ட் நானா தொல்லை" என்ற வரிகளைக் கூறலாம். இந்த வரிகளின் தொடக்கத்தில் உள்ள சில சொற்கள் தான் மிகவும் முக்கியமானது. அதாவது மரணத்தை தழுவும் நேரத்தில் புலம்பி அழுகக் கூடாது என்பதுதான். அப்படி அழுக வேண்டும் என்றால் வாழ்க்கை முழுவதும் அழுது கொண்டேதான் இருக்க வேண்டும். இந்த மொத்த வாழ்க்கையும் மரணத்தை நோக்கிய பயணம் தான். அப்படி இருக்கையில் மரணத்திற்கு அருகில் சென்று விட்டு ஏன் அழவேண்டும். அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். இந்த வரிகள் ரசிகர்கள் மனதில் தைரியத்தை உருவாக்குகிறது.

மேலும் பாடலில் உள்ள கடைசி தத்துவ வரிகள் என்றால் முந்தைய வரிகளை அடுத்து வரும் வரிகள் தான். அதாவது,
" வறுமை கோலத்தில்
நேர்மை பாக்காத
இளமை காலத்தில்
டீசென்சி நல்லா இல்ல" என்ற வரிகள் தான். இந்த வரிகளில் உள்ள வறுமை கோலத்தில் நேர்மை பாக்காத என்பது தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஏதுவான வரிகளாகத்தான் அனுகவேண்டுமே தவிர, அதனை பொதுவான ஒரு சமூக தத்துவத்திற்கு ஏதுவானது அல்ல. இந்த பாடலை லிரிக் வீடியோவாக மட்டும் யூடியூப் தளத்தில் மட்டும் இதுவரை 153 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர். அதேபோல் வீடியோ பாடலாக கிட்டத்தட்ட 7 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











