தெலுங்கு திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு..அட இதை எப்பவோ செய்துட்டாரே சூர்யா..நாசர் பெருமிதம்
நடிகர் நடிகைகள் சம்பளம், உதவியாளர்கள், கேரவன் அட்ராசிட்டி தாங்க முடியாமல் தீர்மானம் போட்டுள்ளது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம்.
ஒரு படத்தின் தயாரிப்புச் செலவில் 75% நடிகர் நடிகைகளுக்கு போகும் நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு.
தமிழில் இதை கடைபிடித்து முன்னுதாரணமாக நடிகர் சூர்யா இருப்பதாக நடிகர் சங்கம் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

திரைப்பட உருவாக்கத்தில் யாருக்கு பங்கு அதிகம்
ஒரு திரைப்படம் உருவாகுவதற்கு பலர் பங்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதில் ஹீரோ, ஹீரோயின் மிக முக்கியம். நல்ல கதை, திரைக்கதை, இயக்குனர், இசை, பாடல்கள், எடிட்டிங் என பலரது கூட்டு உழைப்பே ஒரு நல்ல திரைப்படம் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் எது தவறினாலும் படம் தோல்வியடையும். கதாநாயகன், கதாநாயகி புதுமுகமாக இருந்தாலும் நல்ல கதை, திரைக்கதை, இயக்கம் மூலம் படங்கள் வெற்றிகரமாக ஓடிய வரலாறு திரையுலகில் உண்டு. இது மட்டுமல்ல ஒரு படத்தின் உருவாக்கத்தில் பின்னணியில் ஆயிரக்கணக்கானோர் நேரடியாக, மறைமுகமாக பணியாற்றுவதை யாரும் மறுக்க முடியாது.

கூட்டு உழைப்பில் குளிர் காயும் ஹீரோ, ஹீரோயின்
இப்படிப்பட்ட கூட்டு உழைப்பில் உருவாகும் படத்தில் ஒரு சிலர் மட்டுமே அதன் பெயரை தட்டிக் கொண்டு போகும் சோகமும் நிகழ்வது வாடிக்கையான ஒன்று. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படத்தில் மிகப்பெரிய செலவாக ஹீரோ, ஹீரோயின் சம்பளம் மட்டுமே செல்கிறது. ஒரு படத்தின் தயாரிப்பு செலவு எடுத்துக் கொண்டால் மற்ற செலவுகளை விட ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் கொடுக்கப்படும் சம்பளம் பெரிய செலவாக உள்ளது. அதே நேரம் ஹீரோ, ஹீரோயினால் தான் படம் ஓடுகிறது அதனால் தான் இவ்வளவு தொகை என்று இதற்கு நியாயம் கற்பிப்பவர்களும் உண்டு. இது ஏற்கத்தக்க வாதமாக இருந்தாலும் சமீபகாலமாக பெரிய பட்ஜெட் படங்கள் என்று எடுக்கப்படும் படங்கள் மிகப் பெரிய தோல்வியை தழுவும் பொழுது ஹீரோக்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய தொகை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

தேவையற்ற செலவுகளால் திணறும் தயாரிப்பாளர்கள்
தோல்வி அடைந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லக்கூடிய விஷயங்களை தாண்டி சொல்ல முடியாத வேதனையான பல அம்சங்கள் உண்டு. ஒரு படத்தை தயாரிக்க திட்டமிடும் தயாரிப்பாளர் அதற்கான செலவுகளை கணக்கிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை படத்திற்காக ஒதுக்குவார். இதில் நடிகர் ஒருவரை புக் செய்யும் போது அவரது முந்தையப்படம் நன்றாக ஓடி இருந்தால் திடீரென அவர் சம்பளத்தை உயர்த்துவார். அதையும் சேர்த்து தான் தயாரிப்பாளர் யோசிக்க வேண்டி இருக்கும். இன்னொரு புறம் தயாரிப்பு செலவு என்று ஒவ்வொரு பிரச்சனைகளும் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகும். ஐந்து நிமிடமே வரும் பாடலுக்காக வெளிநாடுகளில் படம் பிடிக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்புவார் ஒரு பாடலுக்காக என்று சொன்னாலும் அதற்கான யூனிட்டை அழைத்துச் செல்வது அவர்களுக்கான செலவு தங்குமிடம் மற்றும் செலவுகள் என்று பார்த்தால் அதுவே சில கோடிகளை தாண்டி விடும்.

பொங்கிய தெலுங்கு பட தயாரிப்பாளர்கள்
இன்னொரு புறம் திடீர் திடீரென வரும் செலவுகள், லொகேஷன், யூனிட் ஆட்கள், நடனம், சண்டை காட்சிகள் இதற்கான செட்டுகள் என பல கோடிகளை செலவழிக்கும் நிர்பந்தம் ஏற்படும். இது அல்லாமல் நடிகர், நடிகைகள் அவருடைய உதவியாளர்களுக்காக கொடுக்கக்கூடிய சம்பளம் மற்ற இத்யாதி செலவுக்காக தனியாக பணம் ஒதுக்கும் நிலை தயாரிப்பாளர்களுக்கு உள்ளது. இது போன்ற விஷயங்களை பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு இடத்தில் பொங்கி விட்டார்கள் தெலுங்கு பட தயாரிப்பு சங்கத்தினர். இன்னும் தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு அந்த தைரியம் வரவில்லை.

உதவியாளர்கள் சம்பளத்தை நடிகர், நடிகைகளே கொடுக்க தீர்மானம்
சமீபத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு விஷயங்களை அவர்கள் கூடி தீர்மானமாக நிறைவேற்றியுள்ளார்கள். அதில் முக்கியமான தீர்மானம் இனி நடிகர், நடிகைகள் உதவியாளர்கள் சம்பளம் உள்ளிட்ட மற்ற செலவுகளை நடிகர் நடிகைகளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும், ஒரு படத்தை தயாரித்து திரையரங்கில் வெளியிட்ட பின் அது குறைந்த பட்சம் எட்டு வாரம் ஓடிய பின் அல்லது 8 வாரம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையும் வலியுறுத்தியுள்ளனர். செலவுகளை குறைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சம்பளத்தை குறைக்கும் கோரிக்கை
இதேபோன்று உச்ச நட்சத்திரங்கள் தங்கள் சம்பளத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையும் பல காலமாக வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வியாபாரம், லாபம் என்கிற அடிப்படையில் இந்த கோரிக்கை எப்பொழுதும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தெலுங்கு தயாரிப்பாளர்கள் இயற்றிய தீர்மானம் தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளனர். இதே கோரிக்கை தமிழகத்தில் இதுவரை வைக்கப்படவில்லை இந்த இடத்தில் முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம் நடிகர் சூர்யா பல விஷயங்களில் பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

முன் உதாரண நடிகர் சூர்யா
சமூக அக்கறையுடன் செயல்படுவது, ஏழை மக்கள் கல்விக்காக அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் உதவுவது. நம் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் பற்றி சமூக அக்கறையுடன் அணுகுவது என பல விஷயங்களில் சூர்யா பல நடிகர்களுக்கு எடுத்த காட்டாக இருந்து வருகிறார். அந்த வகையில் சூர்யா தெலுங்கு தயாரிப்பாளர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை அவர் 4 ஆண்டுகளுக்கு முன்பே கடைபிடித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா தான் படத்தில் நடிக்கும் போது தன்னுடன் இருக்கும் உதவியாளர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளதாக திரைப்பட சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழக நடிகர்களும் இதை கடைபிடிப்பார்களா?
சூர்யாவின் இச்செயலை பலரும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு பாராட்டி வருகின்றனர். பல நடிகர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் சூர்யா தனது உதவியாளர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை தானே ஏற்று அதை பல ஆண்டுகளாக கடைபிடித்தும் வருவதை நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர். இதை ஏன் மற்ற நடிகர், நடிகைகள் பின்பற்ற கூடாது என்ற கேள்வியும் சமூகவலைதளத்தில் நேட்டிசன்களால் எழுப்பப்படுகிறது. 10, 20, 30, 100 கோடி ரூபாய்களில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகளுக்கு இது சுண்டைக்காய் காசுதான் செய்வார்களா?


Click it and Unblock the Notifications











