விஜய்யின் வாரிசுக்கு முன்னுரிமை... அஜித்தின் துணிவுக்கு இடம் இல்லை: தொடரும் பேனர் பஞ்சாயத்து!
சென்னை: விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகின்றன.
8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாவதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வாரிசு, துணிவு படங்களுக்காக திரையரங்குகளில் பேனர் வைப்பதில் தொடர்ந்து மோதல் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு - துணிவு
விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன. வாரிசு ரிலீஸாவதில் சிக்கல்கள் இருந்த நிலையில், தற்போது அந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டன. இதனால், பொங்கல் ரேஸில் விஜய்யும் அஜித்தும் நேருக்கு நேர் மோதவுள்ளது கன்ஃபார்ம் ஆகிவிட்டது. அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் வெளியிட, வாரிசு வெளியீட்டு உரிமையை 7 ஸ்கீரின்ஸ் கைப்பற்றியுள்ளது. இதனால் வாரிசு - துணிவு படங்களுக்கான தியேட்டர்கள் ஒதுக்குவதில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

பேனர் வைப்பதில் தகராறு
இந்நிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் பேனர் வைப்பது வழக்கம். அதேபோல், விஜய்யின் வாரிசு படத்துக்கும், துணிவு படத்துக்காக அஜித்தின் ரசிகர்களும் பேனர் வைத்து வருகின்றனர். இருதரப்பு ரசிகர்களில் யார் வெயிட் என்பதை காட்ட, பேனர் வைப்பதில் தான் கடும் போட்டி காணப்படுகிறது. சென்னையில் உள்ள கமலா, சத்யம், வெற்றி உள்ளிட்ட திரையரங்குகளில் வாரிசு படத்தின் பிரம்மாண்டமான பேனர்களை விஜய் ரசிகர்கள் வைத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்களும் துணிவு படத்தின் பேனர்களை வைக்க, அது சில இடங்களில் பிரச்சினையாகியுள்ளது.

துணிவு பேனர் அகற்றம்
வாரிசு, துணிவு படங்களின் பிரம்மாண்டமான பேனர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள ஜோதி திரையரங்கில் துணிவு படத்தின் பேனர் அகற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் அஜித்தின் துணிவு போஸ்டர் தான் அங்கு வைக்கப்பட்டதாகவும், ஆனால், தற்போது அது அங்கு இல்லை என புகார் எழுந்துள்ளது. மாறாக விஜய்யின் வாரிசு பேனர் மட்டுமே அந்த திரையரங்கில் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது அஜித் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாம். ஏற்கனவே துணிவு பேனர் வைக்க செல்லும் இடமெல்லாம் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் இருக்கிறது.

புயலுக்காக மாற்றமா?
இன்னொருபக்கம் இன்று சென்னையில் புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் தான், துணிவு பேனரை தியேட்டர் நிர்வாகம் எடுத்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக, விஜய்யின் வாரிசு பேனர்கள் இடத்தை அடைத்துவிட்டதால், துணிவு போஸ்டர் வைக்க இடமில்லை என சொல்லப்பட்டது. அதேபோல், சில திரையரங்குகளில் துணிவு படத்தின் பேனர் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் கொடுத்தனர் விஜய் ரசிகர்கள். இதற்குப் போட்டியாக அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்கள் மீது புகார் கொடுத்து வருகிறார்களாம். இதனால், போக்குவரத்து போலீஸார் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











