ஆரம்பித்த முதல் ஓட்டலே மூடல்.. சாதித்த சமையல்காரரின் மகன்.. மாதம்பட்டி ரங்கராஜ் சறுக்கிய கதை!
சென்னை : சில மாதங்களுக்கு முன்பு வரை மாதம்பட்டி ரங்கராஜை இந்த சோசியல் மீடியாவே தலையில் வைத்து கொண்டாடியது. இவர் அந்த வீட்டில் சமைத்தார், உச்ச பிரபலத்தில் வீட்டில் விசேஷத்தில் அசத்திவிட்டார், இதுதான் ராஜ விருந்தா... என பலரும் உச்சி கொட்டி இவரின் சமையலை ரசித்து ருசித்து பாராட்டி வந்தார்கள். ஆனால், இன்று நிலைமையே வேறுவிதமாக மாறி உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாலக்காட்டை சேர்ந்த சமையல்காரர் தான் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் அப்பா தங்கவேலு. சிறுவயதிலேயே தந்தை இறந்து விட குடும்பத்தின் பொறுப்பு மாதம்பட்டி ரங்கராஜின் அப்பா தங்கவேலு தோளுக்கு வந்ததால், குடும்பத்தை காப்பாற்ற தனது 18வது வயதில் பெங்களுரில் ஓட்டலை தொடங்கி நடத்தி வந்துள்ளார் ரங்கராஜின் அப்பா தங்கவேலு. ஆனால், அந்த நேரத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமான அந்த ஓட்டல் இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து மீண்டும் கோவைக்கு வந்த தங்கவேலு, பண்ணையில் வேலை செய்த ஒரு பெண்ணை, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மாதம்பட்டி ரங்கராஜ்: குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கடமை இருந்ததால், கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். ஆனாலும், அவர் தனக்கு தெரிந்த சமையல் தொழிலை தொடங்கலாம் என முடிவு செய்து, லட்சுமி கேட்ரிங் சர்வீஸ் என்கிற பெயரில் கேட்ரிங் சர்வீஸ் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். தங்கவேலின் மூத்த மகனான ரங்கராஜூக்கும் தந்தை போல சமையல் மீது ஆர்வம் இருந்துள்ளது. கோயம்புத்தூரில் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்த ரங்கராஜ், பத்தாம் வகுப்பு படிக்க டவுனில் இருக்கும் பள்ளியில் சேர்கிறார். அந்த பள்ளியிலே திறமையான மாணவன் என பெயர் எடுக்கும் ரங்கராஜ், தந்தையின் ஆசைப்படி ராமகிருஷ்ணா கல்லூரியில் BSC computer technology படித்துள்ளார்.
கடுமையான உழைப்பாளி: என்னத்தான் படித்து இருந்தாலும் அப்பாவின் சமையல் தொழில் மீது இவருக்கு ஆர்வம் இருந்ததால், சமையல் பற்றி படிப்பை படித்து அதில் சின்ன சின்ன நுணுக்கங்களை கற்றுக்கொண்டு 2002 ஆம் ஆண்டு சமையல் துறைக்குள் நுழைந்தார். அப்பா கற்றுக்கொடுத்த கை பக்குவம், அம்மாவின் ருசி, சமையல் மீது ரங்கராஜுக்கு இருந்த ஆர்வம் என அனைத்தும் சேர்ந்து ரங்கராஜை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. முன்னணி நடிகர் வீட்டு கல்யாணம் என்றாலும், அரசியல் பிரமுகரின் கல்யாணம் என்றாலும், மாதம்பட்டி ரங்கராஜின் தேதிக்காக பலரும் காத்து இருக்கின்றனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜ விருந்து கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தார் ரங்கராஜ். கேட்ரிங் சர்வீசில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். அதில் , எப்படி சமைப்பது என்று சொல்லி தருவது மட்டுமில்லாமல், உணவை எப்படி பறிமாற வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறார்.

புகழின் உச்சியில்: விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் மாதம்பட்டியின் உணவை ரசித்து சாப்பிட்ட கமல் அவரை புகழ்ந்து தள்ளிவிட்டார். அதைத் தொடர்ந்து ஷங்கர் மகளின் திருமணம், ராஜமௌலி வீட்டு விசேஷம், அர்ஜூன் மகள் திருமணம், அரசியல் பிரமுகர்களின் விசேஷம் என எதுவாக இருந்தாலும் அதில் மாதம்பட்டி ரங்கராஜின் சமையல் கட்டாயம் இடம் பிடித்துவிடும். இப்படி சமையலில் மட்டுமே கலக்கி வந்த மாதம்பட்டி ரங்கராஜ் மெஹத்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து பென்குயின் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷூக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவராக இருந்து வருகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கு ஸ்ருதி ப்ரியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
சறுக்கிய ரங்கராஜ்: கடுமையான உழைத்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ், முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக ஜாய் கிரிஸில்டா என்பதை திருமணம் செய்து கொண்ட போட்டோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத்தொடர்ந்து, திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக, ஜாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அல்லும் பகலும் கடுமையாக உழைத்து சாதனைப்படைத்த ரங்கராஜ் பெண் விஷயத்தில் சறுக்கி, பெயரை கெடுத்துக்கொண்டு இன்று இணையத்தில் பலரின் பேச்சு ஆளாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











