பிக் பாஸ் வீட்டில் அசீம் கொடுத்த விளக்கம் சரியா தவறா...? மக்கள் பார்வையில் ஒரு அலசல்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம், ஆயிஷா, விக்ரமன், மைனா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் அசீம் நடந்துகொண்ட விதம் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அசீம் - ஆயிஷா - விக்ரமன்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இரு தினங்களுக்கு முன்னர், அசீம், ஆயிஷா, ஜார்னலிஸ்ட் விக்ரமன் மூவருக்கும் இடையில் சண்டை எழுந்தது. இதில், விக்ரமன், ஆயிஷா இருவரையும் ஒருமையில் பேசியதோடு, ரொம்பவே தரக்குறைவான வார்த்தைகளாலும் வசை பாடினார் அசீம். ஆனால், அசீம்க்கு இறுதிவரை மரியாதையுடனும் கண்ணியமாகவும் பதிலளித்தார் விக்ரமன். அதேநேரம், ஆயிஷா இன்னொரு பக்கம் எரிமலையாக வெடித்ததோடு, ஒருகட்டத்தில் செருப்பை கழட்டி அசீமை அடிக்கப் பாய்ந்தார். இந்த விவகாரம் சக பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல், பார்வையாளர்கள் உட்பட அனைவரிடம் கண்டனத்துக்கு உள்ளானது.

ரெட் கார்டு கொடுத்த போட்டியாளர்கள்
இந்நிலையில், நேற்றைய தினம் அகம் டிவி வழியே பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்தார் கமல். அப்போது ரெட் கார்டு வழங்கும் டாஸ்க்கில், அசல் கோளாறு, தனலட்சுமி தவிர அனைத்து போட்டியாளர்களும் அசீம்க்கு ரெட் கார்டு கொடுத்து அன்றைய தினம் நடந்த சம்பவத்துக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து இதுகுறித்து விளக்கம் கொடுத்த அசீம், இது தனது இயல்பு, சின்ன வயதில் இருந்தே அப்படித்தான் இருக்கிறேன். முன்பைவிட இப்போது கொஞ்சம் கோபத்தை குறைத்துவிட்டதாகவும், இனிமேல் அப்படி நடக்க மாட்டேன் எனக் கூறி அனைவரிடமும் மன்னிப்பு கோரினார். இதனை கமலும் ஏற்றுக்கொண்டு அவருக்கு ரெட் கார்டு கொடுக்காமல் எச்சரிக்கை செய்து விட்டுவிட்டார்.

அசீமுக்கு மக்களின் கேள்வி
அசீமை கண்டித்த கமல், விக்ரமன், ஆயிஷா இருவருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அசீம் எல்லை மீறி பேசியதற்கு நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மக்கள் தரப்பில் இருந்து அசீமின் விளக்கத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அசீம் சீரியல் நடிகராக இருந்த போதும், அவர் இன்னும் வளர்ந்து வரும் ஒரு ஆர்ட்டிஸ்ட்டாகவே உள்ளார். மேலும், வாய்ப்புக்காக பலமுறை பொறுமையோடு சில அவமானங்களை ஏற்றுக்கொண்டு கடந்திருப்பார். அதுமட்டும் இல்லாமல் படப்பிடிப்பிலும் சில இடையூறுகளை அவர் சந்தித்திருக்கக் கூடும். அப்படியிருக்கும் போது, விக்ரமன், ஆயிஷா இருவரையும் அவ்வளவு தரக்குறைவாக பேசியிருக்க வேண்டிய அவசியமே இல்லை எனக் கூறி வருகின்றனர்.

குழந்தைகளின் மனநிலை
மேலும், அசீம் பெரும்பாலும் தனது மகன் ரையான் குறித்து நெகிழ்ச்சியோடும் வலியோடும் பேசி வருகிறார். அப்படி இருக்கும் போது தனது மகன் இந்த சம்பவத்தை பார்த்தால், அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும் என அசீம் யோசித்திருக்க வேண்டாமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர். அசீம் தரக்குறைவாக சண்டை போட்டதை அவரது மகன் பார்த்திருந்தால், தந்தை மீது அவனுக்கு வெறுப்புணர்வு வந்துவிடாதா, இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா என விமர்சித்துள்ளனர். அதேபோல், அசீம் மகன் மட்டும் என்றில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை பலரும் குடும்பத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் எனத் தெரிந்தும் அசீம் இப்படி பேசியது தவறே. அவரின் மன்னிப்பை பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டாலும், விளக்கம் ஒருபோதும் சரியானதாக இருக்காது என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











