ஆலுமா, டோலுமா.., அப்டீன்னா இன்னாம்மா?
சென்னை: தமிழர்கள் பெரும்பாலானோரின் வாய் தற்போது முணுமுணுக்கும் பாடல் வரி என்பது வேதாளம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆலுமா டோலுமா, ஐசாலக்கடி மாலுமா' என்பதாகத்தான் இருக்கும். மால்களிலும், ரயில்களிலும், கார் பயணத்திலும் என எங்கும் உற்சாகமூட்டும் பாடலாக வலம் வருகிறது ஆலுமா, டோலுமா.
இத்தனை பேர் அனிச்சையாய் வாயசைக்கும், இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று யாருக்காவது தெரியுமா? "லாலாக்கு டோல் டப்பிம்மா.." போல இதுவும் ஏதோ ஒரு ரைமிங் வரி என்றுதான் நம்மில் பலர் கடந்து சென்றிருப்போம்.

ஆனால், இந்த ஆலுமா, டோலுமாவுக்கு பின்னால் ஆழமான ஒரு அர்த்தம் இருக்கிறது என்கிறார், பாடலை எழுதிய கவிஞர், ஜி.ரோகேஷ். பக்கா மெட்ராஸ்காரரான இவர்தான், 'டங்கா மாரி ஊதாரி, புட்டுகிட்டா நீ நாறி..' என்ற பட்டிதொட்டி கலக்கிய பாடலை எழுதியவர்.
டிவி நிகழ்ச்சியொன்றில், அவர் கொடுத்த விளக்கத்தை பாருங்கள்: "ஆலுமா, டோலுமா என்பது, சென்னை பக்கம் பேசும் பாரம்பரிய சொலவடை. அதாவது, அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, பெரிய பெரிய வில்லத்தனம் செய்பவர்களை அப்படி கூப்பிடுவார்கள்" என்று ஒரு அசத்தல் விளக்கம் கொடுத்தார்.
சரி.. அந்த அரிகலு, கரிகலுவிற்கு என்ன அர்த்தம் என்ற கேள்விக்கு பதிலளித்த ரோகேஷ் "அது கருக்கல். ஆனால் பாடகர் அதை கரிகலு என பாடிவிட்டார். கருக்கல் என்பது ஒரு தின்பண்டத்தின் பெயர்" என்று சளைக்காமல் விளக்கம் கொடுத்தார்.
இனியாவது அர்த்தம் தெரிஞ்சி பாடுங்கப்பா.


Click it and Unblock the Notifications











