திடீரென ஏறிய "பி.பி".. பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மம்முட்டி
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மம்முட்டிக்கு திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகத் திகழும் நடிகர் மம்முட்டி மும்பையில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாயிலிருந்து மும்பை வந்தார்.
அப்போது அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த அழுத்தம் அதிகமானதால் மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை எடுத்த பின்னர் கடந்த சனிக்கிழமை பெங்களூரில் உள்ள மதர்வுட் மருத்துவமனையில் மீண்டும் மம்முட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இந்த உடல்நலக்குறைவால் கடந்த ஒருவார காலமாக மம்முட்டி படப்பிடிப்பு தொடர்பான எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை.
தற்போது அவர் பெங்களூரில் உள்ள அவரது மகள் வீட்டில் ஓய்வு மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்து வரும் மம்முட்டி சரியான ஓய்வு எடுத்துக் கொள்ளாததால் இந்த உடல்நலக்குறைவு அவருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
தற்போது ஓய்வில் இருந்தாலும் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இது குறித்து கேள்விப்பட்ட கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனது தனி உதவியாளர் மூலம் மம்முட்டியைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முதல்வரால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











