தியேட்டர்களில் கட்டணம் எனும் பெயரில் பகல் கொள்ளை ஆரம்பம்!
சென்னை: சென்னை மற்றும் தமிழகமெங்கும் சினிமா டிக்கெட் என்ற பெயரில் பெரும் கொள்ளையை நடத்த ஆரம்பித்துள்ளன திரையரங்குகள்.
ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி விதிப்புக்கு எதிராக கடந்த நான்கு நாட்களாக தியேட்டர்களை மூடி எதிர்ப்புத் தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள், கடைசியில் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து ஸ்ட்ரைக்கைக் கைவிட்டனர்.

இன்று முதல் மீண்டும் தியேட்டர்கள் இயங்குகின்றன. ஆனால் கொள்ளை விலையில் டிக்கெட்டுகளையும், தின்பண்டங்களையும் விற்க ஆரம்பித்துள்ளனர்.
ரூ 100க்கு கீழ் உள்ள டிக்கெட் விலைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும், 120க்கு மேல் உள்ள டிக்கெட் விலைக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி யும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உண்மையில் எவ்வளவு வசூலிக்கிறார்கள்?
அதிகபட்சம் ரூ 159 வரை சென்னை மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் ரொம்ப மோசம். பதிவுக் கட்டணமாக ரூ 30லி்ருந்து 43 வரை சேர்த்து ரூ 200 வரை போகிறது. பார்க்கிங் கட்டணம் எல்லாம் சேர்த்தால் ஒரு நபருக்கு படம் பார்க்க ரூ 250 வரை ஆகிறது.
சென்னையில் ஓரளவு பரவாயில்லை எனும் அளவுக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் இரண்டுதான். ஒன்று ஏவிஎம் ராஜேஸ்வரி. டிக்கெட் விலை பாக்ஸ் ரூ 59, முதல் வகுப்பு ரூ 47. அடுத்தது கேஸினோ. பால்கனி, ப்ரிமியம் இரண்டு வகுப்புகளுக்கும் ரூ 59 வசூலிக்கிறார்கள். உட்லண்ட்ஸ் கூட பரவாயில்லை. பால்கனி ரூ 83 (70), முதல் வகுப்பு ரூ 59 (50), உட்லண்ட்ஸ் சிம்பொனி ரூ 77 (65).
இதுதவிர கேன்டீன்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், டீ, காபி விலையெல்லாம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழக அரசிடம் தோற்றுப்போன கோபத்தில் தாறு மாறாக விலை வைத்து மக்களைப் படுத்த ஆரம்பித்துள்ளன திரையரங்குகள்.


Click it and Unblock the Notifications











