திரையரங்குகள் திறப்பு… வரிசைகட்டி காத்திருக்கும் திரைப்படங்கள் !
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து பலத்திரைப்படங்கள் ரிலீசுக்காக வரிசை கட்டி காத்திருக்கின்றன.
50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்கு இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
திரையரங்கு பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்கைக்கு திரும்பி வரும் நிலையில், தியேட்டர்கள் பார்க் உள்ளிட்ட சிலவற்றிற்கு தளர்வுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

ஆலோசனை
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து, தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

திரையரங்குகளுக்கு அனுமதி
அதன்படி ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, 50 சதவீத இருக்கை வசதிகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ள நிலையில், தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை விரைவில் ரிலீஸ்
திரையரங்கு திறப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் சிறிய படங்கள் அதிக அளவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. ஆக்ஷன் திரைப்படமான 'வலிமை'திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் இன்னும் ஒரு சில நாட்கள் முடிவடைய உள்ளது. இதையடுத்து, திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடியில் ஒருவன்
ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜு, பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரையரங்கு திறப்புக்காக காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் செப்டம்பர் முதல் வாரத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயில்
மரியதாசன் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் ஜெயில். ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ராதிகா சரத் குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், பிரேம்ஜி அமரன், அபர்நதி, பிரகாஷ் ராஜ், சூரி, ஆனந்த் பாபு, பாபி சிம்ஹா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்தும் இருக்கிறார். கொரோனாவால் வெளியாகாமல் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள காத்தோடு காத்தானேன் பாடல் அனைவரின் விருப்ப பாடலாக உள்ளது.

தியேட்டரில் ரிலீஸ்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. 1970களில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சன அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் மறுபடியும் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறிய பட்ஜெட் படங்களான சசிக்குமாரின் எம்.ஜி.ஆர் மகன் பிளான் பண்ணி பண்றோம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











