தியேட்டர்கள் இன்று திறப்பு.. புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை.. தயாரிப்பாளர்கள் முடிவுக்கு கியூப் கண்டனம்
சென்னை: லாக்டவுனால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன. இருந்தாலும் புதிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.
Recommended Video
கொரோனா லாக்டவுன் காரணமாக, மூடப்பட்ட தியேட்டர்களை திறக்க மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தது.
தமிழக அரசு, 10 ஆம் தேதி முதல் 50 இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது.

விபிஎப் பிரச்னை
இதையடுத்து 8 மாதத்துக்குப் பிறகு தியேட்டர்கள் இன்று திறக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் விபிஎப் பிரச்னையை கையில் எடுத்தனர். விபிஎப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்ட முடியாது என்று கூறினர். இதனால் புதிய படங்கள் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுமூகமான தீர்வு
நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில், பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான தீர்வு எட்டப்படாததால், நல்ல தீர்வு ஏற்படும்வரை புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியிருந்தார்.

புதிய படங்கள்
இதனால், தியேட்டர்கள் இன்று திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலை ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கும் புதுப்படங்கள் வெளியாகாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்களின் முடிவுக்கு, க்யூப் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

முறையற்ற செயல்
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'தீபாவளிக்குப் புது படங்கள் வெளியாகும் வழக்கம் தொடர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தியேட்டர்களை திறக்க ஆதரவு தெரிவித்துள்ளன. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு, முறையற்ற செயல். தயாரிப்பாளர் சங்கத்தின் சந்தர்ப்பவாத கோரிக்கைகள் அதிர்ச்சியைத் தருகின்றன என்று கூறியுள்ளது.

விஜய்யின் துப்பாக்கி
இந்நிலையில், புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால், ரஜினிகாந்தின் சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் வீரம், விஸ்வாசம், தனுஷின் அசுரன் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களை மீண்டும் திரையிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











