மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களே இல்லை.. அடித்துச் சொல்லும் சென்சார் அதிகாரி!
மெர்சல் படத்தில் காட்சிகளை நீக்கும் அளவுக்கு சர்ச்சைக்குரிய வசனங்கள் ஏதும் இடம்பெறவில்லை என மண்டல தணிக்கைக் குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை: மெர்சல் படத்தில் காட்சிகளை நீக்கும் அளவுக்கு சர்ச்சைக்குரிய வசனங்கள் ஏதும் இடம்பெறவில்லை என மண்டல தணிக்கைக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். இதில் மருத்துவர்களுக்கு எதிராகவும், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிராகவும் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிகளுக்கு தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆதரவு
எனினும் இந்த படத்துக்கு மக்களிடையேவும், எதிர்க்கட்சியினரிடையேவும் ஆதரவு பெருகி வருகிறது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நிதர்சனம் என்றும் கூறி வருகின்றனர்.

தயாரிப்பாளர் தரப்பு ஆலோசனை
ஜிஎஸ்டி தொடர்பான காட்சியை நீக்கலாமா அல்லது அந்த வசனத்தின் ஒலியை மட்டும் நீக்கலாமா என்று படக் குழுவினரும், தயாரிப்பாளர் தரப்பும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரியது இல்லை
இந்த விவகாரம் பற்றி மண்டல தணிக்கை குழு அதிகாரி மதியழகன் கூறுகையில், மெர்சல் படத்தில் யாரையும் பாதிக்கிற வகையிலோ, சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலோ வசனங்கள் இல்லை.

நீக்குவதற்கு தணிக்கை குழு அனுமதி வேண்டும்
கருத்துரிமை அடிப்படையிலேயே ஜிஎஸ்டி வரி தொடர்பான காட்சிகள் உள்ளன. படத்தில் இக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றால், தணிக்கை குழுவிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











