தெறி... அதிரவைத்த ஓபனிங்!
தெறி படத்துக்கு இதுவரை எந்த விஜய் படத்துக்கும் கிடைக்காத அபார ஓபனிங் (முதல் நாள் வசூல்) கிடைத்துள்ளது.
அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஜாக்ஸன் உள்ளிட்டோர் நடித்த தெறி படம் நேற்று உலகெங்கும் பிரமாண்டமாக வெளியானது.

இதுவரை எந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருந்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
இந்தப் படம் வெளியாகும் நேரம் பார்த்து தமிழக அரசு மற்றும் காவல் துறை கட்டணம் நிர்ணயிப்பதில் கெடுபிடி காட்ட ஆரம்பித்தது. இதனால் செங்கல்பட்டு என்ற பெரிய ஏரியாவில் உள்ள 60 அரங்குகள் படம் வாங்க மறுத்து நெருக்கடி தந்தன.
இதையும் மீறி தன் சொந்தப் பொறுப்பில் 30-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியிட்டார் தாணு.
இன்னொரு பக்கம் தெறி படத்தை கோவையில் உள்ள தியேட்டர் ஒன்றில் வைத்தே திருட்டு விசிடிக்காக தொலைக்காட்சி நிருபரை வைத்தே பதிவு செய்த கொடுமையும் நடந்தது.
ஆனாலும் இவற்றையெல்லாம் தாண்டி தெறி படம் பிரமாண்ட ஓபனிங்கைப் பெற்றுள்ளது.
கிராமப் புறம் நகர்ப்புறம் என்ற பாகுபாடு இல்லாமல், திரையிட்ட இடங்களிலெல்லாம் அபார கூட்டம். அதுவும் கேரளாவில் நேற்று மலையாளப் புத்தாண்டு. ஆனால் எந்த நேரடி மலையாளப் படமும் வெளியாகவில்லை. தெறிதான் அங்கு விஷு ஸ்பெஷல். 180 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற பிற நாடுகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது தயாரிப்பாளர் தாணுவை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











