'போடா போடி'யைத் தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் மோதும் சிம்பு?
சென்னை: தெறி படத்துடன் தன்னுடைய இது நம்ம ஆளு படத்தை மோதவிட , சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்பு நடிப்பில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து இப்படத்தை வெளியிடும் வேலைகளில் தற்போது சிம்பு களமிறங்கியிருக்கிறார்.

தெறி
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படம் வருகின்ற ஏப்ரல் 14 ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் தெறி மிக அதிகமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் படத்தின் தணிக்கை சான்றிதழை படக்குழுவினர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

இது நம்ம ஆளு
சிம்புவுடன் இணைந்து நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, ஜெய் நடித்திருக்கும் இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்திருக்கிறார். சிம்புவின் சினி ஆர்ட்ஸ் இயக்குநர் பாண்டிராஜுடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தெறி படத்துடன் தன்னுடைய நடிப்பில் உருவாகியிருக்கும் இது நம்ம ஆளு படத்தை மோதவிட சிம்பு முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

போடா போடி vs துப்பாக்கி
ஏற்கனவே கடந்த 2012 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்துடன் தன்னுடைய போடா போடி படத்தை சிம்பு மோதவிட்டார். துப்பாக்கி 100 கோடியை வசூலித்து பிளாக்பஸ்டராக மாற, போடா போடி போட்ட பணத்தைக் கூட எடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.

வாலு
சிம்புவின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வாலுவிற்கு விஜய் பொருளாதார ரீதியாக உதவி செய்திருந்தார். இதனால் சிம்பு, விஜய் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது சிம்பு இப்படி செய்வாரா? என்ற கேள்விகளும் எழத் தவறவில்லை. தெறியுடன், இது நம்ம ஆளு படத்தை சிம்பு வெளியிடும் பட்சத்தில் அவர் மீண்டும் தோல்வியை சந்திக்கும் சூழல் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
என்ன செய்யப் போகிறார் சிம்பு?


Click it and Unblock the Notifications











